Friday, April 29, 2005

40]

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 40

ஜியோனிஸம் பற்றிய மிகச்சுருக்கமான அறிமுகத்தைச் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். விரிவாகப் பார்க்க வேண்டிய தருணம் இது. ஏனெனில், இந்த இயக்கத்தின் எழுச்சிதான் இன்றைய இஸ்ரேல் என்கிற தேசத்தைப் பிறகு தோற்றுவித்தது. இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் சிந்திய வியர்வையும் ரத்தமும்தான் காலங்காலமாக சொந்ததேசம் என்று ஏதுமில்லாமல் நாடோடிகள் போல் அலைந்து திரிந்துகொண்டிருந்த யூதர்களுக்கு அப்படியரு கனவை நனவாக்கித் தர அடித்தளமிட்டது.

முதலில் ஜியோனிஸம் இப்படியெல்லாம் வளர்ந்து, உயர்ந்து பெருகும் என்று யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அதைத் தோற்றுவித்தவரான தியோடர் ஹெஸில் (Theodor Herzl) ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு யூதர். கூட ஏதாவது செய்யமுடியுமா பார்க்கலாமே என்றுதான் முதலில் நினைத்தார். திட்டவட்டமான யோசனைகள் எதுவும் முதலில் கைவசம் இல்லை. ஆனால், மிகக்குறுகிய காலத்திலேயே ஹெஸிலுக்கு, தம்மைப்போலவே சிந்திக்கும் வேறு பல யூதர்களும் பல்வேறு தேசங்களில் இருக்கிறார்கள் என்கிற விவரம் தெரிந்துவிட்டது. அதன்பின் அவர்களை ஒருங்கிணைப்பதோ, செயல்திட்டங்களை வகுப்பதோ பெரிய காரியமாக இல்லை.

ஹெஸிலுக்கு என்ன பிரச்னை என்றால், அன்றைய ஜெர்மனியில் இருந்த யூதர்கள் யாரும் தம்மை யூதர் என்று சொல்லிக்கொள்ள முடியாமல் இருந்தது. அதாவது, அடையாளத்தை மறைத்து மட்டுமே வாழமுடியும். இதே நிலைமைதான் ரஷ்யாவிலும் இருந்தது.

யூதர்களின் பெருமை என்னவென்றால், தாங்கள் ஒரு யூதர் என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்லிக்கொள்வது. அதுதான். அந்த ஒன்றுதான் அவர்களை உயிர்வாழவே வைத்துக்கொண்டிருந்தது. அதுகூடச் சாத்தியமில்லாமல் இதென்ன நாய்ப்பிழைப்பு என்று ஜெர்மானிய யூதர்கள் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார்கள். இதற்கு ஏதாவது செய்ய முடியாதா என்றுதான் ஹெஸில் ஆரம்பித்தார்.

‘ஏதாவது செய்யமுடியாதா’ என்கிற எண்ணம் தோன்றிய உடனேயே அவர் இறங்கிய வழி மிக முக்கியமானது. நேராக அன்றைய ஆறு பணக்கார ஜெர்மானிய யூதர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் போனார். பணக்காரர்கள் என்றால் மிகப்பெரிய பணக்காரர்கள். வட்டித்தொழிலில் கொழித்தவர்கள். அவர்களிடம் சென்று ‘யூதர்களுக்கென்று தனியரு தேசம் வேண்டும். இப்படியே காலமெல்லாம் நாம் சிரமப்பட்டுக்கொண்டிருக்க முடியாது. யாராவது இதற்கான முதல் கல்லை எடுத்துவைத்தே ஆகவேண்டும். நான் அதற்காக இறங்கியிருக்கிறேன். நீங்கள் எனக்கு உதவி செய்யமுடியுமா?’ என்று கேட்டார்.

அந்த ஆறு பணக்கார யூதர்களுக்கும் முதலில் ஒன்றும் புரியவில்லை. குழப்பமாக அவரைப் பார்த்தார்கள். ஹெஸில் பொறுமையாக அவர்களிடம் விளக்கினார். யூதர்களுக்கு ஒரு தனிநாடு வேண்டும். எங்கே, எந்த இடத்தில் என்பதெல்லாம் பிறகு நிதானமாக யோசித்து முடிவு செய்யப்பட வேண்டிய விஷயம். ஆனால், முதலில் இந்த எண்ணம் யூதகுலத்தாரிடையே பரவ வேண்டும். இதற்காக உழைக்க வேண்டும். நமக்கான தேசத்தை யாரும் நமக்குத் தூக்கிக் கொடுக்க மாட்டார்கள். நாமேதான் உருவாக்க வேண்டும். தேசம் என்றால் என்ன? நிலப்பரப்பு. பெரிய நிலப்பரப்பு. அவ்வளவுதானே? ஒரு வீடு கட்டவேண்டுமென்றால் நிலம் வாங்க முடிகிறதல்லவா? அதைப்போல் நாம் ஒரு தேசம் கட்டுவதற்கு நிலத்தை வாங்குவோம். அத்தனை யூதர்களும் பணம் போட்டு, நிலம் வாங்குவோம். ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு ஆளுக்குக் கொஞ்சமாக நிலம் வாங்குவோம். மொத்தமாகப் போய் வசிக்க ஆரம்பிப்போம். கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பகுதி நம்முடைய தேசமாகிவிடும்..

ஒரு புரட்சிகரத் தமிழ் சினிமா போல் இருக்கிறதா?

இதில் சிரிப்பதற்கு ஒன்றுமில்லை. இதுதான் உண்மை. பின்னால் இதுதான் நடந்ததும் கூட! நம்பமுடியாத இந்த அதிசயத்தை விரிவாகப் பார்க்கலாம்.

ஹெஸில் பேசிப்பேசி முதலில் அந்த ஆறு பணக்காரர்களைத் தம் திட்டத்துக்குச் சம்மதிக்க வைத்தார். யூத தேசிய உணர்வை முதலில் அவர்களுக்கு ஊட்டினார். அவர்கள் அனைவரும் முதலில் ஹெஸிலின் வீட்டில் அடிக்கடி ரகசியமாகக் கூடிப் பேச ஆரம்பித்தார்கள். பேசிப்பேசி செயல்திட்டங்களை வகுக்கத் தொடங்கினார்கள். அப்படியே உலகெங்கும் வசிக்கும் யூதர்களுக்குத் தங்கள் திட்டத்தைத் தெரியப்படுத்தினார்கள். ஓரளவு நம்பிக்கை வளரத் தொடங்கியதும் ‘உலக யூதர் காங்கிரஸ்’ என்னும் அமைப்பைத் தோற்றுவித்து, அந்த அமைப்பின் முதல் மாநாட்டை ஸ்விட்சர்லாந்தில் நடத்தினார்கள். இது நடந்தது 1896-ம் வருடம். அதாவது, ‘ஏதாவது செய்யவேண்டும்’ என்று ஹெஸில் முதல் முதலில் நினைத்ததற்கு மறு வருடம்.

மாநாடு என்றால் பந்தல் போட்டு, பொதுமக்களைக் கூட்டி நடத்தப்பட்ட மாநாடல்ல அது. மிகவும் ரகசியமாக ஒரு சூதாட்ட விடுதியின் அறையன்றில் நடந்த சிறு கூட்டம்தான் அது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் மொத்தமே இருபது இருபத்தைந்து பேர்தான். (வெறும் ஆறுபேர்தான் கலந்துகொண்டார்கள் என்றும் ஒரு கருத்து இருக்கிறது.) ஆனால், இங்கேதான் ஹெஸில் சுமார் நூறு பக்க அளவில் ஒரு திட்டத்தைத் தயாரித்து வாசித்தார்.

ஜிலீமீ நிக்ஷீணீஸீபீ றிறீணீஸீ என்று சரித்திர ஆசிரியர்கள் இன்றளவும் புகழும் அந்தத் திட்டம் முழுக்க முழுக்க, யூதர்கள் தமக்கென ஒரு தேசத்தை அமைத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்திச் சொன்னது. ஹெஸிலின் திட்டத்தை இவ்வாறு சுருக்கிச் சொல்லலாம்:

1. யூதர்கள் தமக்கென ஒரு தேசத்தை அமைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். எப்பாடுபட்டாவது இதனை நாம் செய்தே ஆகவேண்டும்.

2. இயேசுவைக் கொன்றவர்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து கூறப்பட்டுவருவதை நிறுத்தவேண்டும். இதனை சாமர்த்தியமாகச் செய்வதன்றி வேறு வழிகளில் சாதிக்க முடியாது.

3. கிறிஸ்துவர்கள் நமது பகைவர்கள். ஆனாலும் ஐரோப்பாவில் அவர்களே மிகுதி என்பதால், அவர்களுடன் நட்புணர்வு கொண்டு நடந்துகொள்ள வேண்டும். அவர்கள் தாமாகப் பகையை மறக்குமளவுக்கு நாம் நடந்துகொள்ளவேண்டியது முக்கியம்.

4. நமக்காக யாரும் ஒரு தேசத்தை எழுதித்தர மாட்டார்கள். நாம் வாழவிரும்பும் இடத்தை நாம் விலை கொடுத்து வாங்கவேண்டும். இது ஒரு நீண்டகாலத்திட்டம்.

5. நமது தேசத்தைக் கட்டுவதற்காக நாம் வாங்கப்போகிற நிலங்களுக்கான பணத்தைச் சேமிக்க, நமக்கென ஒரு வங்கி வேண்டும். அந்த வங்கியில் சேரும் பணத்துக்கு ‘யூததேசிய நிதி’ என்று பெயர்.

6. நமக்கொரு கொடி வேண்டும். கொடி என்பது ஓர் அடையாளம். எழுச்சியின் சின்னம். வெண்மையும் நீலமும் கலந்த கொடியன்றை நான் சிபாரிசு செய்கிறேன். (யூதர்கள், தேவாலயங்களுக்குச் செல்லும்போது இப்படி வெண்மையும் நீலமும் கலந்த துணியன்றைத் தோளில் அணிந்து செல்வது வழக்கம்.)

இவற்றுடன் ‘பிணீtவீளீஸ்ணீலீ’ (என்றால் நம்பிக்கை என்று பொருள்) என்கிற ஒரு தேசிய கீதத்தையும் இணைத்துத் தமது அறிக்கையைச் சமர்ப்பித்தார் ஹெஸில்.

ஹெஸிலின் திட்டம் மிகத்தெளிவானது. தொலைநோக்குப் பார்வை கொண்டது. யூதர்களுக்கான தேசம் என்பது நினைத்த மாத்திரத்தில் கிடைத்துவிடாது என்பதை அவர் அறிந்தே இருந்தார். ஆனால், தங்கள் முயற்சியின் பாதை இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற தெளிவு அவரிடம் இருந்தது. ஹெஸில் தமது முதல் அறிக்கையை வெளியிட்டதிலிருந்து சரியாக ஐம்பது ஆண்டுகளில் இஸ்ரேல் உருவாகிவிட்டது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அவரது திட்டத்தை யூதர்கள் தங்களுடைய இன்னொரு வேதமாகவே கருதி உழைத்ததுதான் காரணம்.

அந்த ஸ்விட்சர்லாந்து மாநாடு நடந்து சரியாக ஒரே வருடத்தில் ஒட்டுமொத்த யூதகுலத்துக்கும் ஹெஸிலின் திட்டம் குறித்த முழு விவரங்களும், யூதர்கள் ஓர் அமைப்பின்மூலம் ஒன்றுசேரவேண்டிய அவசியமும் தெரிந்துவிட்டது. யூதகுலத்தின் நன்மைக்காக ஏதாவது செய்யவேண்டும் என்பது ஒவ்வொரு யூதரும் தனித்தனியே எப்போதும் யோசிக்கிற விஷயம். இப்படி ஓர் அமைப்பின் மூலம் யோசிப்பதும் செயல்படுவதும்தான் அவர்களுக்குப் புதிது. ஆனாலும் உற்சாகமாக ஈடுபடத் தொடங்கினார்கள்.

முதலில் நில வங்கி (Land Bank) என்கிற வங்கியன்று ஏற்படுத்தப்பட்டது. இது யூதர்களின் வங்கி. அவர்கள் நிலம் வாங்குவதற்காகப் பணம் சேர்க்கவென்றே தொடங்கப்பட்டது. இந்த வங்கி தொடங்கப்பட்ட மிகச் சில மாதங்களுக்குள்ளாகவே பல லட்சக்கணக்கான தொகை வந்து குவிந்ததைச் சொல்ல வேண்டும். பெரும்பாலான யூதர்கள் வட்டிக்குப் பணம் தருகிறவர்களாக, பெருவர்த்தகர்களாக, கடல் வாணிபத்தில் தேர்ந்தவர்களாக இருந்தது இதற்கு மிக முக்கியக் காரணம். மொத்தமாக நன்கொடை போல் ஒரு பெரும் தொகையைத் தங்கள் நில வங்கிக்கு அளித்தவர்களும் உண்டு; மாதாமாதம் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை இந்த வங்கிக்கு அளித்தவர்களும் உண்டு. ஆனால், எந்த ஒரு யூதரும் ஒரு பைசாவாவது இதில் முதலீடு செய்யாமல் இல்லை. உலகம் முழுவதிலும் எங்கெல்லாம் யூதர்கள் பரவியிருந்தார்களோ, அங்கிருந்தெல்லாம் பணம் வந்து குவியத் தொடங்கியது.

ஹெஸில், இந்த வங்கிகள் என்ன செய்யவேண்டும் என்று ஒரு திட்டம் வரைந்திருந்தார். அதன்படி யூத நில வங்கி (அதன் அனைத்துக் கிளைகளும்), நிலம் வாங்குவதற்குப் பணம் கடனாகத் தரவேண்டும். அதாவது, யார் நிலம் வாங்க வங்கிக்கடன் தேடி அலைந்தாலும் கூப்பிட்டுக் கொடுக்க வேண்டும். குறிப்பாக, ஐரோப்பியர்களுக்கும் அரேபியர்களுக்கும். எத்தனை லட்சம் கேட்டாலும் கடன் தரலாம். அப்படிக் கடன் பெற்று நிலம் வாங்குவோரின் நிலப்பத்திரங்கள், வங்கியில் அடமானமாக இருக்கும். உரிய காலத்தில் கடன் தொகை திருப்பிச் செலுத்தப்படாவிட்டால், நிலத்தை வங்கி எடுத்துக்கொண்டுவிடும். அப்படி வங்கி கையகப்படுத்தும் நிலங்களில் உடனடியாக யூதக் குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டுவிட வேண்டும். குடியேறும் யூதர்களின் பாதுகாப்புக்கு வங்கியே உத்தரவாதமளிக்கும்.

அடுத்தபடியாக, நேரடி நிலக் கொள்முதல். இதன்படி, யூத நில வங்கி, தானே நேரடியாகவும் நிலங்களை வாங்கும். இந்த இடத்தில் ஒரு யூதக்குடியிருப்பு அமைக்கலாம் என்று வங்கி தீர்மானிக்குமானால், அங்கே உள்ள நிலத்தை வங்கி எத்தனை பணம் கொடுத்து வேண்டுமானாலும் வாங்கலாம். அப்படி வாங்கும் நிலத்திலும் உடனடியாகக் குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

யூத நில வங்கி மூலம் அமைக்கப்படும் குடியிருப்புகளில் கண்டிப்பாக யூதர்கள் மட்டுமே வசிக்க வேண்டும்.

அதுசரி, நிலங்களை எங்கே வாங்குவது? எந்தப் பகுதி மக்களுக்குக் கடன் கொடுப்பது?

இங்கேதான் இருக்கிறது விஷயம். தியோடர் ஹெஸிலின் உலக யூதர் காங்கிரஸ் அமைப்பு உருவானது தொடங்கி, நில வங்கிகள் முளைத்த தினம் வரை அவர்களிடம் ‘எந்த இடம் நம் இடம்?’ என்கிற வினாவுக்கான தெளிவான பதில் இல்லை. பாலஸ்தீன் தான் யூதர்களின் விருப்பம். ஹெஸிலுக்கும் அதுதான் எண்ணம். ஆனாலும் ஒரு தேசத்தை நமக்காக உருவாக்கவேண்டும் என்று பேச ஆரம்பித்தபோது, பாலஸ்தீன் தவிரவும் சில பகுதிகளை அவர்கள் யோசித்துப் பார்த்திருக்கிறார்கள்.

குறிப்பாக கென்யா, அர்ஜண்டைனா, சிலி போன்ற தேசங்களில் நிலம் வாங்கலாமா என்று பலபேர் சிந்தித்திருக்கிறார்கள். ஐரோப்பா வேண்டாம் என்பதில் யாருக்கும் இரண்டாவது அபிப்பிராயமே இல்லை. ஆனால் சிலருக்கு அமெரிக்காவில் செய்யலாமா என்கிற யோசனை இருந்திருக்கிறது. நெப்ராஸ்கா பகுதியில் (ஓர் அமெரிக்க மாகாணம்.) நிலங்களை வாங்கிப்போட்டு யூதக்குடியிருப்புகளை நிறுவலாம் என்று பலபேர் பேசியிருக்கிறார்கள்.

என்னதான் கிறிஸ்துவர்களுடன் சமாதானமாகப் போகவேண்டும் என்று ஹெஸில் தொடர்ந்து வலியுறுத்தினாலும், தங்களுக்கென்று ஒரு தேசம் உருவானால் அது கிறிஸ்துவ ஐரோப்பாவில் அமையுமானால், வாழ்நாளெல்லாம் பிரச்னைக்கு உள்ளாக நேரிடும் என்று ஒட்டுமொத்த யூதகுலமும் ஐயப்பட்டது.

அனைத்துத் தரப்புக் கருத்தையும் கேட்டுவிட்டு இறுதியில் 1897-ம் ஆண்டு கூடிய உலக யூதர் காங்கிரஸ் கூட்டத்தில்தான் ஹெஸில் அதனை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

வேறு வழியில்லை. நாம் பாலஸ்தீனில் நிலம் வாங்குவோம். அங்கேயே போய்க் குடியேறுவோம்.

ஒட்டாமான் துருக்கியப் பேரரசர்தான் அப்போதும் பாலஸ்தீனை ஆண்டுகொண்டிருந்தார். எந்தப் பிரச்னையும் இல்லாமல் அங்கே யூதர்கள் வாழ்ந்துகொண்டிருந்த காலமும் கூட அது. ஹெஸிலின் முடிவு பாலஸ்தீன யூதர்களுக்கு ரகசியமாகத் தெரிவிக்கப்பட்டது.

நல்லநாளெல்லாம் பார்த்தார்களா என்று தெரியவில்லை. பாலஸ்தீனில் திடீரென்று ஆங்காங்கே புதிய நில வங்கிகள் தோன்ற ஆரம்பித்தன. கேட்பவர்களுக்கு மட்டுமல்லாமல், கேட்காதவர்களுக்கும் நிலம் வாங்குவதற்காகப் பணத்தை அள்ளி அள்ளிக்கொடுக்க ஆரம்பித்தார்கள்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 10 ஏப்ரல், 2005

No comments: