Sunday, October 02, 2005

89] கோஃபி அன்னனின் சாமர்த்தியமான அறிக்கை

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 89
ஏரியல் ஷரோனுக்கு முன்பு, இஸ்ரேலின் பிரதமராக இருந்த ஈஹுத் பாரக்குடன் யாசர் அராஃபத்துக்கு, அரசியல் ரீதியில் ஏற்பட்ட சில கருத்து மோதல்கள், சில தாற்காலிக அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட தோல்வி, ஏரியல் ஷரோன், அல் அக்ஸா மசூதிக்குள் நுழைந்து, அரசியல் நாடகம் நிகழ்த்தியது ஆகியவைதான் இரண்டாவது இண்டிஃபதாவின் ஆரம்பம் என்பதைப் பார்த்தோம். யாசர் அராஃபத்தை இஸ்ரேல் ராணுவம் வீட்டுச் சிறையில் வைத்தது, இந்தப் போராட்டத்துக்கு உடனடியாக ஒரு சர்வதேச கவனம் அளித்தது. உலக அளவில், ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினரும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்து, இஸ்ரேலுக்கு எதிரான கண்டன அறிக்கைகளை வெளியிடத் தொடங்கினார்கள். மத்தியக் கிழக்கிலுள்ள அத்தனை அரபு தேசங்களும் நிலைமையின் தீவிரத்தைத் தணிக்க, என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்க, ஆங்காங்கே, சில்லறைத் தீவிரவாதங்கள் புரிந்துகொண்டிருந்த ஏராளமான அடிப்படைவாத இயக்கங்கள், தமது கவனத்தை உடனடியாகப் பாலஸ்தீன் மீது குவிக்க ஆரம்பித்தன.

யுத்தம்தான் என்று முடிவாகிவிட்டபிறகு, பாலஸ்தீன் போராளி இயக்கங்கள் யாருடைய கட்டளைக்காகவும் காத்திருக்காமல், மேற்குக்கரையிலும் காஸாவிலும் வந்து குவிந்திருந்த இஸ்ரேலியப் படைகளுக்கு எதிராக, மிகத் தீவிரமாகப் போரிடத் தொடங்கின. செப்டெம்பர் 2000_ல் இண்டிஃபதா ஆரம்பமான வினாடி தொடங்கி, யாசர் அராஃபத் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்ட தினம் வரை மொத்தம் 1100 முஸ்லிம்கள், மேற்குக்கரையில் இஸ்ரேலிய ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். 20,000_க்கும் மேற்பட்டோர், தாக்குதலில் படுகாயமடைந்திருந்தார்கள்.

இந்தத் தகவல்கள் எதுவும் வெளியே தெரியாமல் இருப்பதற்காக, இஸ்ரேல் அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டது. யுத்தபூமியாகச் சித்திரிக்கப்பட்டிருந்த மேற்குக் கரை நகரங்களில், கூடுமானவரை சர்வதேசப் பத்திரிகையாளர்களை அனுமதிக்காமல் இருப்பதற்குத் தன்னாலான அத்தனை முயற்சிகளையும் ஷரோன் மேற்கொண்டார். குறிப்பாக, யாசர் அராஃபத் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்பட்ட கலவரங்களில் மட்டும் (அதாவது மார்ச், ஏப்ரல் 2002_ம் ஆண்டு காலக் கட்டத்தில் மட்டும்), மொத்தம் ஐந்நூறு பேர் கொல்லப்பட்டிருந்தார்கள்.

தவிர, பாலஸ்தீன் அத்தாரிடி என்னும் ஆட்சி மையம், இனி எக்காலத்திலும் தலைதூக்கவே முடியாதவாறு, அவர்களது அரசியல் மற்றும் நிர்வாகம் சார்ந்த உள் கட்டுமானத்தை, முற்றிலுமாக உடைத்து வீசியிருந்தது இஸ்ரேல் ராணுவம். அராஃபத்தின் அல் ஃபத்தா அமைப்பின் மூத்த உறுப்பினர்களில் பெரும்பாலானோர் ரகசியமாகக் கைது செய்யப்பட்டு, டெல் அவிவுக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டிருந்தனர். யார், யார் எப்போது கைது செய்யப்பட்டார்கள் என்கிற விவரமே, மிகத் தாமதமாகத்தான் தெரியவந்தன.

அப்படிக் கைதுசெய்யப்பட்டவர்கள் மீது கடும் அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டு, மூன்றாந்தரக் கிரிமினல்கள்போல் விசாரிக்கப்பட்டு, ஏராளமான விவரங்கள் சேகரிக்கப்பட்டன; வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

இஸ்ரேல் அரசைப் பொறுத்தவரை, அவர்களுக்கு இரண்டு விஷயங்களைத்தான் உறுதிப்படுத்த வேண்டியிருந்தது. முதலாவது, பாலஸ்தீன் அத்தாரிடி ஆட்சி அதிகாரங்களில் ஹமாஸுக்கும், இஸ்லாமிக் ஜிகாத் அமைப்புக்கும் சில முக்கியப் பொறுப்புகளை, ரகசியமாக வழங்குவதற்கு ஒப்புக்கொண்டிருப்பதாக, அவர்கள் சந்தேகப்பட்டார்கள். அதாவது, தீவிரவாத இயக்கங்களின் உறுதுணையுடன் ஓர் ஆட்சி! இதற்கு அவர்கள் ஆதாரமாகச் சுட்டிக்காட்டியது, ஹமாஸின் திடீர் அராஃபத் ஆதரவு நிலை.

ஓஸ்லோ ஒப்பந்தத்துக்குப் பிறகு நடைபெற்ற சில அரசியல் காட்சிகளில் வெறுப்புற்று, ஓர் ஆட்சியாளராக அராஃபத்தை ஏற்க மறுத்திருந்த ஹமாஸ், திடீரென்று அவரை ஒரு மக்கள் தலைவராகவும், பாலஸ்தீன் விடுதலைக்குப் பாடுபடும் தன்னிகரற்றத் தியாகியாகவும் சித்திரித்து அறிக்கைகள் வெளியிட்ட விவகாரம், இஸ்ரேல் அரசை மிகவும் கலவரமூட்டியிருந்தது.

இரண்டாவதாக, இஸ்ரேல் உறுதிப்படுத்த விரும்பிய விஷயம், பாலஸ்தீன் அத்தாரிடி, அரசுப்பணத்தைத் தீவிரவாத இயக்கங்களுக்குக் கணிசமாக வழங்கிக்கொண்டிருக்கிறது என்பது.

இந்த இரு காரணங்களுக்காகவே, அல் ஃபத்தா மூத்த உறுப்பினர்கள் ரகசியமாகக் கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அவர்களுள் மிக முக்கியமானவர்கள் நான்கு பேர். மார்வான் பார்கோவுதி, நாஸிர் அவிஸ், நாஸிர் அபுஹமீத் மற்றும் அஹமத் பார்கோவுதி ஆகியோர்.

இந்த நான்கு மூத்த அல்ஃபத்தா உறுப்பினர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், 'இஸ்ரேலிய மக்களைத் தாக்குவதற்காக, பாலஸ்தீன் தீவிரவாத இயக்கங்களுக்கு அராஃபத் தலைமையிலான பாலஸ்தீன் அத்தாரிடி அரசு, தொடர்ந்தும் கணிசமாகவும் நிதியுதவி அளித்து வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக' ஏரியல் ஷரோன் அறிவித்தார்.

இதன் காரணமாகவே, அராஃபத்தை வீட்டுச்சிறையில் வைத்து விசாரிப்பது அவசியமாகிறது என்றும் சொன்னார்.

கொதித்துப் போய்விட்டார்கள், பாலஸ்தீனியர்கள். அல் ஃபத்தா உறுப்பினர்கள் ஒருபோதும் அத்தகைய வாக்குமூலங்களை அளிக்கமாட்டார்கள் என்பது, அவர்களின் ஆழமான நம்பிக்கை. தவிரவும், பாலஸ்தீன் அத்தாரிடி, போராளி இயக்கங்களுக்கு உதவுவதற்கு அல்லாமல், வேறு என்ன ஆட்சி செய்து கிழித்துவிடப்போகிறது?

இப்படிச் சொல்வது, நமக்கு விநோதமாகவும் சிரிப்பூட்டக்கூடியதாகவும் இருக்கலாம். பாலஸ்தீன் மக்களைப் பொறுத்தவரை, இதுதான் அவர்களது நிரந்தர நியாயமாக இருக்கமுடியும். ஏனெனில், போராளி இயக்கங்கள் உயிருடன் இருக்கும் வரைதான், தம்மால் சுதந்திரக் கனவுகளையாவது சுதந்திரமுடன் கண்டுகொண்டிருக்க முடியும் என்று, அவர்கள் நினைத்தார்கள்... இயக்கங்களை இஸ்ரேல் அரசு நசுக்கி எறிந்துவிட்டால், அதன்பிறகு, பாலஸ்தீன் விடுதலைக்காகக் குரல்கொடுக்கக்கூட ஒரு நாதியில்லாமல் போய்விடும்.

ஏற்கெனவே, பல லட்சக்கணக்கான பாலஸ்தீன் மக்கள், வாழ வழியில்லாமல், பல்வேறு அரபு தேசங்களில் அகதிகளாகச் சுற்றித் திரிந்துகொண்டிருக்கிறார்கள். பாலஸ்தீனிலேயே வசிக்கும் அரேபியர்களோ, தினசரி இஸ்ரேல் ராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்காகி, உயிரையும் உடைமைகளையும் இழந்துகொண்டிருந்தார்கள். இந்நிலையில், அமைதி குறித்து உபயோகமில்லாமல் பேசிக்கொண்டிருப்பதைக் காட்டிலும், ஆயுதம் மூலம் ஏதாவது செய்ய மட்டுமே அவர்கள் மிகவும் விரும்பினார்கள். ஆகவேதான், அராஃபத்தை இஸ்ரேல் அரசு வீட்டுச்சிறையில் வைத்திருக்கும் விஷயம் கேள்விப்பட்டவுடனேயே ஊர்வலம், போராட்டம் என்று இறங்கிவிட்டார்கள்.

ரமல்லா நகரில் ஒரு சுவரை, அவர்கள் மிச்சம் வைக்கவில்லை. எங்கு பார்த்தாலும் அராஃபத்தின் புகைப்படங்களுடனான போஸ்டர்கள். இஸ்ரேல் அரசின் அடக்குமுறைகளைக் கண்டிக்கும் வாசகங்கள். ஒரு மேடை கிடைத்தால், உடனடியாக ஒரு பொதுக்கூட்டம். கல்வீச்சுகளுடன் கூடிய கண்ணீர்க் காண்டம் அது.

அராஃபத் சிறைவைக்கப்பட்டு இருமாதங்கள் ஆகிவிட்டிருந்த நிலையில், நிலைமை மிக மோசமான கட்டத்தைத் தொடும்போலிருந்தது. போராளி இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து, முழுநீளத் தாக்குதல் ஒன்றை நடத்த ஆலோசிக்க ஆரம்பித்தன. இதற்கு வெளியிலிருந்தும் ஆதரவு திரட்டும் திட்டம், ஹமாஸுக்கு இருந்தது. அல் காயிதா, ஜமா இஸ்லாமியா போன்ற பாலஸ்தீனுக்குச் சம்பந்தமில்லாத இயக்கங்கள் சிலவற்றின் ஆதரவைப் பெற்று, ஒரு முழு அளவிலான யுத்தத்தைத் தொடங்கும் சாத்தியங்கள் இருப்பதாக, இஸ்ரேலிய உளவு அமைப்பு மொஸாட் ஒரு ரகசிய அறிக்கை அனுப்பியது.

ஐ.நா.வின் பொதுச்செயலாளர் கோஃபி அன்னன், இஸ்ரேலைக் கண்டித்து ஓர் அறிக்கை வெளியிட்டார். கொஞ்சம் சாமர்த்தியமான அறிக்கை அது.

யாசர் அராஃபத்தை வீட்டுச்சிறையில் வைத்து இஸ்ரேல் விசாரித்துக்கொண்டிருந்தது பற்றி, அந்த அறிக்கையில் நேரடிக் கண்டனம் எதுவும் இல்லை. மாறாக, 'யாசர் அராஃபத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைக் கொஞ்சம் தளர்த்தவேண்டும்; பாலஸ்தீன் அத்தாரிடியை முற்றிலுமாக அழித்து ஒழிக்கும் முயற்சியைக் கைவிடவேண்டும்; இல்லாவிட்டால் பிரச்னை இன்னும் பெரிதாகத்தான் ஆகும்' என்று அதில் அவர் சொல்லியிருந்தார்.

இதே கோஃபி அன்னன், அறிக்கையாக அல்லாமல் ஒரு கூட்டத்தில் பேசும்போது மட்டும், 'அராஃபத்தை வீட்டுச்சிறையிலிருந்து விடுவிக்கவேண்டும்' என்று கோரிக்கை வைத்ததை இங்கே நினைவுகூரவேண்டும்.

எல்லோருக்குமே தயக்கமாகத்தான் இருந்தது. எல்லோருக்குமே பயமாகவும் இருந்தது. எல்லோருமே குழப்பத்தில்தான் இருந்தார்கள். அராஃபத் விஷயத்தில் எந்தமாதிரியான முடிவை எடுப்பது என்பதில் இருந்த குழப்பம், தயக்கம், பயம் மற்றும் படபடப்பு.

அராஃபத் தீவிரவாத இயக்கங்களுக்குத் தொடர்ந்து நிதியுதவி செய்துவருகிறார் என்று, அடித்துச் சொல்லிக்கொண்டிருந்தது இஸ்ரேலிய அரசு. அதனால்தான் அவரை வெளியே போகமுடியாதபடி, வீட்டுச்சிறையில் வைத்திருப்பதாகவும், பாலஸ்தீன் நகரங்களில் தீவிரவாத இலக்குகளை நோக்கித் தாக்குதல் நடத்திவருவதாகவும், அவர்கள் சொன்னார்கள்.

இல்லை; அராஃபத் அப்படிச் செய்யக்கூடியவர் இல்லை; அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான அவர், ஒருபோதும் இயக்கங்களுக்குச் சார்பு நிலை எடுக்கமாட்டார் என்று பகிரங்கமாக ஒப்புக்கொள்ள, யாருக்கும் மனம் வரவில்லை.

அராஃபத் என்கிற மனிதரின் இருவேறு முகங்கள் எப்போதும் உண்டாக்கிவந்த குழப்பத்தின் உச்சகட்டம் அது!

தோதாக, ஏரியல் ஷரோன் கோஃபி அன்னனுக்குப் பதில் அளிக்கும் விதத்தில், ஓர் அறிக்கை வெளியிட்டார். 'பாலஸ்தீன் அத்தாரிடியுடன் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் எப்போதும் தயாராகத்தான் இருந்து வந்திருக்கிறோம். ஆனால், இப்போதைய சூழ்நிலை, கூப்பிட்டு உட்காரவைத்து அமைதி குறித்துப் பேசும் விதமாக இல்லை. ஏழு நாள். வெறும் ஏழுநாள் இஸ்ரேலிய நகரம் எது ஒன்றிலும் குண்டுவெடிக்காமல் இருக்கட்டும் முதலில். அதன்பிறகு அவர்களோடு பேசுவது பற்றி முடிவு செய்யலாம்' என்று சொன்னார் அவர்.

அந்தளவுக்குப் போராளி இயக்கங்களும் அங்கே ரணகளப்படுத்திக்கொண்டிருந்ததையும் குறிப்பிட்டாக வேண்டும்.

2002_ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் முழுவதும் இதே கதைதான். மே மாத வாக்கில் அராஃபத்தின் வீட்டைச் சுற்றிப் போடப்பட்டிருந்த காவல், கொஞ்சம் விலக்கிக்கொள்ளப்படுவது போன்ற சூழல் ஏற்பட்டது. அராஃபத் பால்கனிக்கு வந்து கையாட்டிய காட்சியை, உலகத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. நிலைமை கொஞ்சம் சீராகும்போல்தான் தெரிந்தது.

இதற்குக் காரணம், மிக எளிமையானது. இஸ்ரேலுக்குக் கொஞ்சம் அவகாசம் வேண்டியிருந்தது. தனது ராணுவத்தை மீண்டும் திரட்டி, புத்துணர்ச்சியுடன் போரிட அனுப்ப நினைத்தார் ஷரோன். சில தினங்களாவது அவர்களுக்கு ஓய்வு வேண்டும் என்று கருதினார்கள்.

அராஃபத்தை இஸ்ரேல் அரசு, வீட்டுச்சிறையில் வைத்திருக்கவில்லை என்பது தெரிந்தால், போராளிகள் கொஞ்சம் அமைதியடையலாம், பொதுமக்களும் கொஞ்சம் அமைதிகாப்பார்கள் என்று நினைத்துத்தான் இதனைச் செய்தார்கள்.

ஆனால், அதிக அவகாசம் எடுத்துக்கொள்ளவில்லை. ஜூன் மாதம் தொடங்கியதுமே இஸ்ரேலிய டாங்குகள், இரவோடு இரவாக, ரமல்லா நகருக்குள் நுழைய ஆரம்பித்துவிட்டன. ராக்கெட்டுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நேராக அராஃபத்தின் மாளிகையை நோக்கிச் செலுத்தப்பட்டன. ஹமாஸின் அரசியல் தலைவர்கள் இரண்டுபேரை, இதே போன்ற ராக்கெட் தாக்குதல்கள் மூலம் கொன்றிருந்த இஸ்ரேல் அரசு, தமது அடுத்த குறி, அராஃபத் தான் என்று மிக வெளிப்படையாகவே சொன்னது. இனி அவருடன் ஒரு போதும் அமைதிப்பேச்சு என்பதே இல்லை என்று அடித்துச் சொன்னார், ஏரியல் ஷரோன்.

யாசர் அராஃபத், பதவி விலகவேண்டும். மம்மூத் அப்பாஸ் போன்ற ஓரளவு 'நியாயஸ்தர்கள்' யாராவது ஆட்சிப்பொறுப்பை ஏற்கவேண்டும். அமெரிக்கா முன்னின்று வரைந்தளித்திருந்த 'ரோட் மேப்' குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்க, இந்தளவாவது ஆரம்பம் சரியாக இருந்தால்தான் பேச்சுவார்த்தை சாத்தியம். ஆனால் அராஃபத் பதவி விலகமாட்டார். ஆகவே, அவரைத் தாக்கி அழிப்பதைத் தவிர, தனக்கு வேறு வழியில்லை என்று ஷரோன் சொல்லிவிட்டார்.

ஜூன் 10_ம் தேதி திங்கள்கிழமை. ரமல்லா நகர் முழுவதும் இஸ்ரேலிய ராணுவம் குவிக்கப்பட்டுவிட்டது. நள்ளிரவு நேரத்தில் மைக் வைத்து சாலைகளில் அறிவித்தபடி, ராணுவ ஜீப் ஒன்று ஓடியது. ''மறு உத்தரவு வரும்வரை, பொதுமக்கள் யாரும் வீதிக்கு வரவேண்டாம். வீட்டைப் பூட்டிக்கொண்டு உள்ளேயே இருக்கவும்.''

இந்த அறிவிப்பு வெளியான அடுத்த மூன்றாவது நிமிடத்தில், காதைக் கிழிக்கும் சப்தம் ஒன்று கேட்டது. அராஃபத் தங்கியிருந்த மாளிகையின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி, புல்டோசர் கொண்டு இடிக்கப்படும் சத்தம் அது.

பின்னாலேயே இன்னொரு சப்தமும் கேட்டது. எங்கிருந்தோ சீறிவந்து மாளிகையின் மேல் தளத்தில் மோதிய ஒரு ராக்கெட் குண்டின் சப்தம்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 29 செப்டம்பர், 2005

No comments: