Tuesday, November 15, 2005

100] பாலஸ்தீன் பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன?

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 100

மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளில் 1977_ம் ஆண்டு தொடங்கி நிறுவப்பட்ட அத்துமீறிய யூதக் குடியிருப்புகளை இஸ்ரேல் இப்போது காலி செய்ய முடிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டது. இது சர்வதேச அளவில் கவனம் பெற்றதையும், அனைத்துத் தரப்பினரும் ஏரியல் ஷரோனைப் பாராட்டுவதையும் பார்த்தோம்.

அரேபியர்கள் வாழும் பகுதிகளில் வசித்து வந்த யூதர்கள் அத்தனை பேரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதன்மூலம், அரேபியர்களின் நிலப்பகுதி அவர்களுக்கே சொந்தம் என்பதாக இஸ்ரேல் ஒப்புக்கொள்வதாகிறது. அமைதி நடவடிக்கை இதே ரீதியில் அடுத்த கட்டத்தை நோக்கி நகருமானால், காஸா பகுதியில் எப்போதும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் இஸ்ரேலிய ராணுவம், அடுத்தபடியாக முழுவதுமாக விலக்கிக்கொள்ளப்படும். காஸாவை ஒட்டிய கடல் எல்லைகளும் பாலஸ்தீன் அத்தாரிடியின் முழுக்கட்டுப்பாட்டுக்கு அடுத்தபடியாக வந்து சேரும்.

அதற்குமேல் ஒன்றுமில்லை. பூரண சுதந்திரம்தான்.

அவ்வளவுதானா? இதனை நோக்கித்தான் இஸ்ரேல் போய்க்கொண்டிருக்கிறதா? என்றால், இப்போதைக்கு பதில் 'இல்லை' என்பதுதான்.

குடியேற்றங்களைக் காலி செய்வதென்று இஸ்ரேல் எடுத்த முடிவு தாற்காலிக நடவடிக்கைதான். இஸ்ரேலில் விரைவில் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிற சூழ்நிலையில் பாலஸ்தீன் போராளி இயக்கங்களைச் சற்றே அமைதிப்படுத்தி வைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே இது. மிக அதிக விலை கொடுத்துத்தான் இஸ்ரேல் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், எப்போது தேவைப்பட்டாலும் பாலஸ்தீன் எல்லைக்குள் திரும்பவும் தனது அதிகார மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையில் செய்யப்பட்ட காரியம்தான் இது.

ஏனெனில் முப்பது நாற்பது வருடங்களாக, ஒரே இடத்தில் வசித்துவந்த ஆயிரக்கணக்கான மக்களை, நாற்றைப் பிடுங்கி நடுவது போலப் பிடுங்கிக்கொண்டுபோய் வேறிடத்தில் வாழச் சொல்லுவதென்பது யூதர்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை உருவாக்கியே தீரும். இதற்கான அரசியல் நியாயங்கள் ஏரியல் ஷரோனுக்கு இருக்கலாம். இஸ்ரேல் மக்களுக்கு இதில் எந்த நியாயமும் தெரிவதற்கு நியாயமில்லை!

அரசாங்கம்தான் அவர்களுக்கு வீடு கட்டிக்கொடுத்துக் கொண்டுபோய் மேற்குக் கரையிலும் காஸாவிலும் குடிவைத்தது. அதே அரசு இப்போது வலுக்கட்டாயமாக வெளியேற்றி, குடியிருப்புகளை இடித்துத் தரைமட்டமாக்கியும் இருக்கிறது. பாலஸ்தீனியர்களின் அமைதிக்காகத் தங்கள் அமைதி பறிபோவதை யூதர்கள் ஒருபோதும் சம்மதிக்கமாட்டார்கள்.

போராளி இயக்கங்கள் அமைதி காத்து, இஸ்ரேல் பொதுத்தேர்தல் வேண்டுமானால் பிரச்னையில்லாமல் நடக்கலாம். ஆனால், இஸ்ரேலியர்கள் அடுத்து அமையப்போகும் அரசை நிம்மதியாக இருக்கவிடமாட்டார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதற்காக ஷரோன் இப்படியொரு காரியம் செய்யவேண்டும் என்று கேட்டால், அதற்கும் ஒரே பதில்தான். முன்னரே நாம் பார்த்துவிட்ட பதிலும் கூட. அராஃபத்துக்குப் பிறகு அமைதி! அதை நிரூபிப்பதற்காகச் செய்யப்பட்ட காரியமே தவிர வேறில்லை.

என்றால், பாலஸ்தீன் பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன?

நான்காயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு விதமான வடிவங்களில் அங்கே உலவிக்கொண்டிருப்பது பிரச்னை ஒன்றுதானே தவிர, அமைதி அல்ல. சமகாலம் நமக்குத் தெரிகிறது. சரித்திரத்தைப் படித்துத் தெரிந்துகொள்கிறோம். புராணங்கள் கதை வடிவில் கிடைக்கின்றன. எந்தக் காலத்திலும் பிரச்னை மட்டும் ஒன்றுபோலவேதான் இருந்துவந்திருக்கிறது.

தலைவர்கள் மாறலாம், ஆட்சி மாறலாம், அதிகாரம் மாறலாம். அவ்வப்போது அமைதி ஒப்பந்தங்கள் அரங்கேறலாம். நிரந்தரத் தீர்வு என்கிற மாபெரும் கனவு நனவாவதற்கு எதுதான் தடையாக இருக்கிறது?

முதலாவது காரணம், இஸ்ரேலிய ஆட்சியாளர்கள். அடிப்படையில் அவர்களுக்கு பாலஸ்தீனை ஒரு சுதந்திர தேசமாக வாழவிடுவதில் விருப்பம் இல்லை. அரேபியர்களால் யூதர்களுக்கு எப்போதும் ஆபத்துதான் என்பது அவர்களது கருத்து. அடக்கிவைத்திருக்கும் வரைதான் ஜீவித்திருக்க முடியும் என்பது யூதர்கள் தமக்குத்தானே வகுத்துக்கொண்டுவிட்ட சித்தாந்தம். சரித்திரம் முழுவதும் ஒதுங்க ஓரிடமில்லாமல் தேசம் தேசமாக ஓடிக்கொண்டிருந்த இனம் அது. எத்தனையோ போராடி, எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்து, பிச்சை எடுத்து, கெஞ்சிக் கூத்தாடி, படாதபாடு பட்டு 1948_ம் ஆண்டு இஸ்ரேல் என்கிற ஒரு யூத தேசத்தை அவர்கள் தமக்குத் தாமே உருவாக்கிக்கொண்டார்கள். அப்படி உருவானதற்கு அவர்கள் பாலஸ்தீன் அரேபியர்களைத்தான் களப்பலியாகக் கொடுக்கவேண்டியிருந்தது.

ஆயிரம் அமைதி பேசினாலும் இந்த அடிப்படைப் பகை இரு தரப்புக்கும் எந்தக் காலத்திலும் மனத்திலிருந்து அழியப்போவதில்லை. ஆகவே, இப்போது பாலஸ்தீனுக்கு சுதந்திரம் வழங்கிவிட்டால் நிரந்தர அண்டைநாட்டுச் சண்டை என்றாகிவிடும். தவிரவும் சுதந்திரமடைந்த பாலஸ்தீன், பிற அரபு தேசங்களுடன் இணைந்து இஸ்ரேலைத் தாக்கலாம். சுதந்திரம், தனி நாடு என்கிற சந்தோஷம், ஒரு தேசத்து மக்களுக்கு எத்தனை மானசீக பலம் தரும் என்பதற்கு இஸ்ரேல் பிறந்தபோது கண்ட மாபெரும் வெற்றிகளே சாட்சி. அந்த வாய்ப்பைத்தான் அவர்கள் இப்போது பாலஸ்தீனுக்குத் தருவதற்குத் தயங்குகிறார்கள்.

அடுத்தபடியாக பாலஸ்தீனுக்கு சுதந்திரம் என்று பேசினால், ஜெருசலேம் யாருடையது என்கிற கேள்விக்கு முதலில் பதில் கண்டுபிடித்தாக வேண்டும். குறிப்பாக அந்த மசூதி வளாகம்.

பாபர் என்கிற ஒரு மன்னர் கட்டிய மசூதியை இங்கே இடித்துவிட்டு இன்று வரையிலும் நாம் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் சிக்கல்களை எண்ணிப் பார்க்கலாம். ஜெருசலேத்தில் இருக்கும் மசூதி பாபரைப்போல் ஒரு மன்னர் தொடர்புடையது அல்ல. இஸ்லாத்தைத் தோற்றுவித்தவரான முகம்மது நபியுடன் நேரடியாகச் சம்பந்தமுள்ளது. ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் அது ஒரு புனிதத்தலம். மெக்காவில் உள்ள க'அபாவுக்கு அடுத்தபடியாக ஜெருசலேம் மசூதிதான் அவர்களுக்கு.

அப்படிப்பட்ட தலத்தை இடித்து அகழ்வாராய்ச்சி செய்து அங்கே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சாலமன் மன்னர் கட்டிய கோயில் இருக்கிறதா என்று பார்க்க நினைப்பதை எந்த முஸ்லிமாலும் சகித்துக்கொள்ளமுடியாது. இதுவரை செய்யப்பட்ட ஆராய்ச்சிகளில் உருப்படியாக ஓர் ஆதாரமும் அகப்படாத நிலையில் தொடர்ந்து அங்கே இஸ்ரேலிய அரசு அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள நினைப்பது அரசியலே அல்லாமல் வேறல்ல. உயிரை விடாமல் நின்றுகொண்டிருக்கும் ஓர் உடைந்த ஒற்றைச்சுவர்தான் யூதர்களின் ஆதாரம். அந்தச் சுவர் சாலமன் மன்னர் எழுப்பிய ஆலயத்தின் சுற்றுச்சுவர் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

எத்தனை நூற்றாண்டுகளானாலும் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடையாது. ஆகவே ஜெருசலேம் ஒரு நிரந்தரப் பிரச்னை பூமியாகிறது. இந்நிலையில் ஒருவேளை பூரண சுதந்திரமே கிடைத்தாலும் ஜெருசலேம் அல்லாத சுதந்திரத்தை முஸ்லிம்கள் மனமுவந்து ஏற்பது சாத்தியமே இல்லை. ஜெருசலேத்தை மையமாக வைத்து அடுத்தபடியாக யுத்தம் ஆரம்பமாகும். சொல்லப்போனால் இதுவரை நடந்தவற்றைக் காட்டிலும் உக்கிரமடையவும் வாய்ப்புகள் அதிகம்.

இரண்டாவது தடை, போராளி இயக்கங்களின் செயல்பாடு. நவீன உலகில் இன்று ஆயுதப்போராட்டங்கள் வெற்றி அடைவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு. ஆயுதம் தாங்கியவர்களை உலகம் எப்போதும் அச்சத்துடன் மட்டுமே பார்க்கும். நெருங்கிப் பேசத் தயங்குவார்கள். போராளிகளை விலக்கிவிட்டு, அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தவே பெரும்பாலான அரசுகள் விரும்புகின்றன. பாலஸ்தீன் போன்ற தேசத்தில் அது சாத்தியமில்லை என்று தெரிந்தாலுமே கூட தொடர்ந்து அதையே ஏன் செய்துவருகிறார்கள் என்று யோசித்துப் பார்க்கலாம். தாற்காலிகமாகவாவது இயக்கங்கள் போர் நிறுத்தம் அறிவித்துவிட்டு அமைதிப் பேச்சுக்கு உடன்பட்டால் ஓரளவு நியாயமான பலன்களை எதிர்பார்க்க முடியும்.

யாசர் அராஃபத் அமைதிக்குப் பச்சைக்கொடி காட்டிய அதே சந்தர்ப்பத்தில் ஹமாஸும் அவருக்குத் தோள் கொடுத்திருந்தால் நிலைமை வேறு விதமாகியிருக்கும். ஹமாஸ் ஓர் அரசியல் இயக்கமல்ல என்பதை ஒரு காரணமாகச் சொல்ல முடியாது. பாலஸ்தீனைப் பொறுத்தவரை அரசியல் தொடங்கி அமைதி வரை தீர்மானிக்கும் மிகப்பெரிய சக்தி அது. ஆனால், அவர்கள் செய்யவில்லை. இதற்கு யாரைக் குறை சொல்ல முடியும்?

பாலஸ்தீன் பிரச்னைக்குத் தீர்வு காணத் தடையாக இருக்கும் மூன்றாவது அம்சம், அரபு நாடுகளின் ஒற்றுமையின்மை. சற்று யோசித்துப் பாருங்கள். இஸ்ரேல் என்பது மிகச் சிறியதொரு தேசம். யூத இனம் என்பது ஒப்பீட்டளவில் மிகக்குறைவான எண்ணிக்கையே கொண்ட மக்களால் ஆனது. அவர்களால் ஒற்றுமையாகச் செயல்பட்டுத் தமக்கென ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்திருக்கிறது. ஆனால் பல கோடிக்கணக்கான மக்களுடன் உலகின் இரண்டாவது பெரிய மதம் என்கிற பெயருடன் விளங்கும் இஸ்லாத்தைச் சேர்ந்தவர்களால் ஏன் தமது இன மக்களுக்கு உதவி செய்ய முடியவில்லை?

உலகில் வசிக்கும் முஸ்லிம்களுள் பெரும்பான்மையானோர் மத்தியக் கிழக்கில்தான் இருக்கிறார்கள். மத்தியக் கிழக்கில் இஸ்ரேல் தவிர மற்ற அனைத்து தேசங்களுமே இஸ்லாமிய தேசங்கள்தான். அவர்கள் ஒன்று சேர்ந்து பாலஸ்தீன் பிரச்னைக்கு ஒரு முடிவு காண முடியாதா? அமைதித் தீர்வைக் கூட விட்டுவிடலாம். 1948 தொடங்கி எத்தனை யுத்தங்கள் அங்கே நடந்திருக்கின்றன! எந்த ஒரு யுத்தத்திலும் ஏன் பாலஸ்தீனியர்களால் வெற்றி பெற முடியவில்லை? சகோதர தேசங்கள் எல்லாம் அப்போது என்ன செய்துகொண்டிருந்தன?

அரபு தேசங்களின் கூட்டமைப்பு இருக்கிறது. அடிக்கடி கூடி மாநாடு நடத்தி இதுநாள் வரை என்ன சாதித்தார்கள் என்று ஏன் தமக்குத் தாமே அவர்கள் கேட்டுக்கொள்ளவில்லை? உண்மையில் பாலஸ்தீன் சுதந்திரத்தில் அவர்களுக்கு விருப்பமாவது இருக்கிறதா இல்லையா?

இதற்கான சரியான காரணம் பொருளாதாரம் சம்பந்தப்பட்டது. சொன்னால் வலிக்கும் என்றாலும் சொல்லாமல் இருக்க முடியாது. மற்ற அனைத்து அரபுதேசங்களுடன் ஒப்பிடவே முடியாத அளவுக்கு பாலஸ்தீன் ஒரு ஏழை நாடு. அங்கே பெட்ரோல் கிடைப்பதில்லை. இதை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். மேலும் ஆண்டுக்கணக்கில் போராட்டத்தில் வாழ்க்கையைக் கழித்த மக்கள். அடிப்படை வசதிகள் கூட கிடையாது. விவசாயம் செத்துவிட்டது. கல்வியறிவு சதவிகிதம் குறைவு. வேலை வாய்ப்புகள் குறைவு. தொழில் தொடங்கி நடத்தும் சாத்தியங்கள் குறைவு. வெளிதேசத் தொழில் நிறுவனங்கள் பாலஸ்தீனில் முதலீடு செய்வதென்பதும் மிக மிகக் குறைவு. வசதி வாய்ப்புகளற்ற, தினசரி யுத்தம் நடக்கிற ஒரு தேசம் அது. சொந்த இனமே என்றாலும் ஆதரவு தெரிவித்துவிட்டுப் பின்னால் யார் அரவணைத்து வளர்ப்பது என்கிற பதுங்கல் மனப்பான்மை அனைத்து அரபு தேசங்களுக்கும் உண்டு. இதனாலேயே பாலஸ்தீன் பிரச்னைக்கும் தமக்கும் தொடர்பில்லாதது போல அவர்கள் காலம் காலமாக நடந்துகொண்டு வருகிறார்கள்.

பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் உள்ள நான்காவது தடை, அகதிகள். 1948_ம் ஆண்டு தொடங்கி இன்று வரை பல லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வாழ வழியில்லாமல் மத்தியக் கிழக்கு முழுவதும் அகதிகளாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். சுதந்திரம் என்று வருமானால் அத்தனை பேரும் பாலஸ்தீனை நோக்கித்தான் வந்து சேருவார்கள். இந்த ஐம்பதாண்டுகளாகப் பெருகியுள்ள மக்கள் தொகைக்குக் கிட்டத்தட்ட சம அளவில் அகதிகளின் எண்ணிக்கையும் இருக்கும். சுதந்திர பாலஸ்தீனின் எல்லைக்கு உட்பட்ட நிலப்பரப்பு கனம் தாங்காமல் தள்ளாடும். ஆகவே எல்லைகளில் ஊடுருவல் நடக்கும். அது சண்டைக்கு வழி வகுக்கும். பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது இஸ்ரேலின் பாதுகாப்புக்குக் கேடு என்று இஸ்ரேல் ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள். இன ரீதியில் ஒன்றானவர்களைத் தேசிய அடையாள ரீதியிலும் ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் வசிக்க அனுமதிப்பது தனது தலையில் தானே மண் அள்ளிப்போட்டுக்கொள்வதற்குச் சமம் என்று இஸ்ரேல் கருதுகிறது.

ஐந்தாவது தடை, விவரிக்கவே அவசியமில்லாத ஈகோ பிரச்னை. இது இஸ்ரேலிய ஆட்சியாளர்கள் மட்டத்தில் மட்டுமல்லாமல் யூத மக்களிடத்திலும் ஆழமாக வேரோடியிருப்பதுதான் வேதனையின் உச்சம். ஐம்பதாண்டு காலமாக பாலஸ்தீன் அரேபியர்களை அடக்கி ஆண்டுகொண்டிருந்த ஆணவம், அத்தனை சுலபத்தில் அவர்களை விட்டு இறங்க மறுக்கிறது. யுத்தமும் இழப்புகளும் பழக்கமாகிவிட்டபடியால் ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ளும் மனோபாவம் மட்டுமே மேலோங்கியிருக்கிறது. சரித்திரம் தங்களுக்குத் துரோகம் இழைத்ததை இன்று வரை மறக்காத யூதர்கள், சகோதர அரேபியர்களுக்குத் தாங்கள் இழைப்பதும் துரோகம்தான் என்பதை எண்ணிப் பார்க்க மறுக்கிறார்கள்.

இந்தக் காரணங்களால்தான் ஆயிரம் முறை அமைதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் பாலஸ்தீன் பிரச்னை இன்றுவரை தீராத ஒன்றாகவே இருந்து வருகிறது.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 6 நவம்பர், 2005

No comments: