Wednesday, July 13, 2005

67] அந்த மூன்று காரணங்கள்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 67

இஸ்ரேல் உருவான போது காஸா பகுதி இஸ்ரேலின் பெருமைக்குரிய இடங்களுள் ஒன்றாக இருந்தது. 1948 யுத்தத்தின்போது அது எகிப்து வசமானதை ஏற்கெனவே பார்த்தோம். எப்படியாவது காஸாவை எகிப்திடமிருந்து மீட்டுவிடவேண்டுமென்பதுதான் இஸ்ரேலின் அடிப்படை எண்ணம். இழந்த பகுதியை மீட்கும் சாக்கில் இன்னும் கொஞ்சம் சேர்த்துச் சாப்பிட முடிந்தால் சந்தோஷம்தானே?

இந்தத் திட்டத்துடன்தான் இஸ்ரேல் ராணுவம் காஸா வழியாக எகிப்தினுள் புகுந்தது. யுத்தம் வரத்தான் போகிறது என்பது நாசருக்குத் தெரியுமென்றாலும் சற்றும் எதிர்பாராத கணத்தில் இஸ்ரேல் தனது ஊடுருவலை நிகழ்த்திவிட்டதால், எகிப்தினால் முதலில் சுதாரித்துக்கொள்ள முடியவில்லை. காஸா முழுவதையும் கைப்பற்றிக்கொண்டு, நின்று மூச்சுவிடக்கூட அவகாசமில்லாமல் நேரே சினாய்ப் பகுதியினுள் புகுந்து விட்டது இஸ்ரேல் ராணுவம்.

சினாய் என்கிற இன்றைய எகிப்தின் ஒரு மாநிலப் பரப்புக்கு ஓர் இதிகாசப் பெருமை உண்டு. அது ஒரு பெரிய பாலைவனப்பகுதி. மணலையும் வெயிலையும் தவிர, வேறு எதுவும் அங்கே கிடையாது. மக்கள் வாழ முடியுமா என்றால் அதுவும் கிடையாது. (ஆங்காங்கே சில நாடோடிக் கூட்டங்கள் வசிப்பதுண்டு. ஆனால் நான் பெங்களூரில் இருக்கிறேன், சென்னையில் இருக்கிறேன் என்று சொல்வது மாதிரி சினாயில் இருக்கிறேன் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு மக்கள் கிடையாது.) ஆனால், மோசஸ் என்கிற இறைத்தூதர் இங்கே ஒரு சிறு குன்றின் மீது ஆடு மேய்த்துக்கொண்டிருந்த போதுதான் அவருக்கு தேவ வசனங்கள் அருளப்பட்டதாக நம்பிக்கை. (பத்து கட்டளைகள்.) அந்த வகையில் சினாய், எகிப்தின் முக்கியப் பிராந்தியங்களுள் ஒன்றாகிறது. பெருமைக்குரிய புனிதப் பாலைவனம்.

காஸா வழியே புறப்பட்ட இஸ்ரேலியப் படைகள், சினாய் பாலைவனத்தைக் கடக்கும்போது, பெரிய எதிர்ப்புகள் ஏதும் அவர்களுக்கு இல்லை. மேலும் ஆளற்ற பாலைவனத்தில் ஊடுருவுவதும் சுலபம். அப்படி ஊடுருவி எத்தனை தூரத்துக்கு ஒரு படை முன்னேறிவிடுகிறதோ, அதுவரை வேலி போட்டு கையகப்படுத்தி விடுவதுதான் வழக்கம். அப்புறம் சண்டைக்கு வந்தால் பார்த்துக்கொள்ளலாம், அப்போதைக்கு அது நம் இடம் என்கிற கணக்கு.

ஒரு பக்கம் இஸ்ரேல் இப்படி ஊடுருவிக்கொண்டிருந்த அதே சமயம், இன்னொருபுறம் இஸ்ரேலுக்கு உதவிக்கு வந்த இங்கிலாந்தும் பிரான்ஸும் சைப்ரஸ் தீவிலும் மால்டாவிலும் தன்னுடைய போர் விமானங்களைத் தயாராக நிறுத்தி, வான்வழித் தாக்குதலுக்கு ஆயத்தங்கள் மேற்கொள்ள ஆரம்பித்தன. உண்மையில் இங்கிலாந்தும் பிரான்ஸும் கொண்டுவந்து குவித்த விமானங்களுக்கும் ஆயுதத் தளவாடங்களுக்கும் அந்த இரு இடங்களில் இருந்த விமானத்தளங்கள் சுத்தமாகப் போதவில்லை. மிகவும் பாழடைந்திருந்த தளங்களிலிருந்துதான் அந்த இரு தேசங்களும் தம்முடைய தாக்குதலைத் தொடங்கின.

அக்டோபர் 31-ம் தேதி பிரான்ஸ் தனது நேரடித் தாக்குதலை ஆரம்பித்தது. விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களிலிருந்து எகிப்தின் அத்தனை மாகாணங்களின் மீதும் குண்டு வீசத் தொடங்கினார்கள். இங்கிலாந்தும் மறுநாளிலிருந்து தன்னுடைய தாக்குதலை ஆரம்பித்துவிட்டது.

சூயஸ் கால்வாயை மீட்பதற்காகத் தொடங்கப்பட்ட இந்த மும்முனைத் தாக்குதலுக்கு ளிஜீமீக்ஷீணீtவீஷீஸீ விusளீமீtமீமீக்ஷீ என்று பெயரிட்டார்கள். விusளீமீtமீமீக்ஷீ என்கிற சொல்லில் விசேஷம் ஏதுமில்லை. ஆயுதமேந்திய போர்வீரன். அவ்வளவுதான்.

ஆனால் இந்த ஆப்பரேஷன் மஸ்கடீர் என்று பெயரிட்டு ஒரு போரைத் தொடங்கினால் அந்தப் போருக்குக் குறைந்தது மூன்று நோக்கங்களாவது இருக்கும் என்பது சரித்திரம். இரண்டாம் உலகப்போர் சமயம் பிலிப்பைன்ஸைக் கைப்பற்றுவதற்காக அமெரிக்கத் தளபதி டக்ளஸ் மெக் ஆர்த்தர் மேற்கொண்ட யுத்தத்துக்கு இதே பெயர்தான் வைக்கப்பட்டது. இன்னும் ஒரு சில யுத்தங்களுக்கும் இதற்கு முன்னால் இப்பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு யுத்தத்துக்கும் மூன்று நோக்கங்கள் அவசியம் உண்டு.

எகிப்தின் மீதான இந்த மூன்று தேசங்களின் தாக்குதலுக்கு அந்த மூன்று காரணங்கள் என்னென்ன?

1. சூயஸ் கால்வாயை மீட்பது.

2. எகிப்து அதிபர் நாசரைக் கொஞ்சம் பயமுறுத்தி வைப்பது, முடிந்தால் பணியவைப்பது.

3. மத்தியக்கிழக்கில் உள்ள அத்தனை அரபு தேசங்களுக்கும் ஐரோப்பாவின் மீது எப்போதும் கொஞ்சம் நிரந்தரமான பயம் இருக்கும்படி பார்த்துக்கொள்வது.

வெளியே பேசப்பட்ட காரணங்கள் இவைதான் என்றாலும். உண்மைக் காரணங்கள் அனைத்துமே பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் சம்பந்தப்பட்டவை. அனைத்து ஐரோப்பிய தேசங்களுமே (அப்போது சற்றும்) வளராத ஆசிய, கிழக்காசிய தேசங்களில் தங்கள் வர்த்தக சாத்தியங்களை விரிவாக்கி, பெரிய, நிரந்தரமான மார்க்கெட்டைப் பிடிப்பதில் குறியாக இருந்தன. இந்தியா, இலங்கை, மலேசியா, தாய்லாந்து போன்ற தேசங்களில் ஐரோப்பியக் கடைகள் விரிக்கப்படும் பணி மிக மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. சூயஸ் கால்வாய்தான் இது எல்லாவற்றுக்குமே ஆதார வழி.

ஆகவே சூயஸை எகிப்திடமிருந்து மீட்பதுடன் மட்டுமல்லாமல், இனி எக்காலத்திலும் எந்தப் பிரச்னையும் வராத அளவுக்கு சர்வதேசச் சட்டங்களில் திருத்தம் செய்து சூயஸை ஒரு பொதுவுடைமைச் சொத்தாக்குவதில் மேற்சொன்ன தேசங்கள் மிகத் தீவிரமாக இருந்தன. இஸ்ரேலுக்கு இதனைக் காட்டிலும் முக்கிய நோக்கம், இடம் பிடிப்பது. அதாவது இழந்த காஸா பகுதி. மேலும் தானாகக் கையில் விழுந்த சினாயை நிரந்தரமாக வைத்துக்கொள்வது. நிலப்பரப்பை விஸ்தரித்துக்கொள்வதன் மூலமே மத்திய ஆசிய அரபு தேசங்களிடையே தன்னைப் பற்றியதொரு அச்சத்தைத் தோற்றுவிக்க முடியும் என்று இஸ்ரேல் நம்பியது.

தாக்குதல் மிகவும் சூடுபிடித்தது. இங்கிலாந்தும் பிரான்ஸும் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலுக்கு நாசர், நீர் வழியே பதில் சொன்னார்.

கட்டுப்பாட்டை மீறி சூயஸ் கால்வாய்க்குள் அப்போது இந்த மூன்று தேசங்களின் போர்க்கப்பல்கள் (சுமார் நாற்பது) அணி வகுத்து வந்துகொண்டிருந்தன. நாசர், ஒரு வினாடிகூட யோசிக்காமல் அந்த நாற்பது கப்பல்களையும் பீரங்கிகளைக் கொண்டு சுட்டு வீழ்த்த உத்தரவிட்டார்.

அவற்றுள் சுமார் இருபது கப்பல்கள் பிரான்ஸினுடையவை. பதினைந்து கப்பல்கள் இங்கிலாந்துடையவை. மிச்சமெல்லாம் இஸ்ரேலுக்குச் சொந்தமானவை.

சூயஸ் கால்வாய்க்குள் வந்துகொண்டிருந்த இந்தக் கப்பல்களை எகிப்து ராணுவம் மூன்று முனைகளிலிருந்து தாக்கின. விமானத் தாக்குதல் ஒரு பக்கம். நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் இன்னொரு பக்கம். நிலத்தில் இருந்தபடியே பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்துவது மூன்றாவது.

சற்றும் குறி தவறாமல் நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதலில் அந்த நாற்பது கப்பல்களும் மூழ்கிப் போயின. இது இங்கிலாந்து, பிரான்ஸ் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்குமே அதிர்ச்சியளிக்கும் விஷயமாக இருந்தது. நாசரைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று ஐரோப்பா முதல் முதலில் முடிவு செய்தது அப்போதுதான்.

நவம்பர் ஐந்தாம் தேதி கூட்டணிப் படைகள் பாராசூட் மூலம் எகிப்தின் பாலைவனப் பகுதிகளில் ராணுவ வீரர்களை இறக்கிவிட்டு ஊருக்குள் ஊடுருவ உத்தரவிட்டன. விமானத் தாக்குதலுக்குச் சாதகமாக நகர்ப்புறங்களிலும் புற நகர்ப்பகுதிகளிலும் ஆயத்தங்கள் செய்து வைக்க வேண்டுமென்பது இந்த இறக்கிவிடப்பட்ட வீரர்களுக்கு அளிக்கப்பட்ட உத்தரவு.

இந்த வீரர்களுள் இரண்டு பேர் மறுநாள் காலையே தமது பணியின் அதிகபட்ச சாத்தியத்தைத் தொட்டார்கள். எகிப்தின் கிழக்கு மற்றும் தெற்கு கடற்கரையோரம் இறக்கிவிடப்பட்ட இந்த இரண்டு பேரும் (பெயர்கள் தெரியவில்லை இருவரும் கமாண்டோக்கள்.) ஆளுக்கு ஒரு சக்திமிக்க வெடிகுண்டை இயக்கி, பிராந்தியத்தையே நிலைகுலையச் செய்தார்கள். மக்கள் அலையலையாக அலறிக்கொண்டு ஓடத் தொடங்கினார்கள். மறுபுறம் போர்ட் சயீத் துறைமுகத்தின் மீது பிரெஞ்சுப் படைகள் நிகழ்த்திய கெரில்லாத் தாக்குதலில் துறைமுகம் முற்றிலுமாகச் சீர்குலைந்து போனது.

எகிப்து ராணுவம் தன்னால் இயன்ற அளவுக்குத் தற்காப்புத் தாக்குதலில் ஈடுபட்டபோதும், இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலின் கூட்டணிப் படையின் அளவுக்கு முன்னால் எகிப்து ராணுவம் அளவிலும் தரத்திலும் மிகவும் பின்தங்கியிருந்ததால் அவர்களால் பெரிய அளவில் சாதிக்க இயலவில்லை.

ராணுவ ரீதியில் எகிப்துக்கு இந்த சூயஸ் யுத்தம் ஒரு பெரிய தோல்விதான். இதில் சந்தேகமே இல்லை. ஆனால் அரசியல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியை இது அவர்களுக்குத் தேடித்தந்தது.

சற்று நுணுக்கமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் இது.

சற்றேறக் குறைய இதே 1956 காலகட்டத்தில் ஹங்கேரியில் ஒரு புரட்சி வெடித்தது. இதைச் சிறிய புரட்சி என்றோ பெரிய கலவரம் என்றோ சொல்லலாம். இந்தப் புரட்சிக்குக் காரணமாக, பின்னணியில் இருந்து செயல்பட்டது, அமெரிக்கா. வழக்கம்போல அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ., ஹங்கேரியில் ஆட்சியாளர்களுக்கு எதிராகச் செயல்பட்டுக்கொண்டிருந்த புரட்சியாளர்களை ஒருங்கிணைத்து, பயிற்சியளித்து, அரசுக்கு எதிரானதொரு யுத்தத்தை ஆரம்பித்து வைத்தது.

ஆனால், இந்தப் புரட்சியின் பின்னணியில், தான் இருப்பதாகவே சி.ஐ.ஏ. அந்த முறை காட்டிக்கொள்ளவில்லை. அமெரிக்கத் தொடர்பு இருப்பது வெளியே தெரியவேண்டாம் என்றே அப்போதைய அமெரிக்க அதிபர் ஐசனோவர் கருதினார். ஆனாலும் இதெல்லாம் மூடி வைக்கக்கூடிய விஷயம் இல்லை என்பதால் விஷயம் வெளியே பரவிவிட்டது. உடனே அமெரிக்காவின் பரம எதிரியான சோவியத் யூனியன், உலகெங்கும் அமெரிக்காவின் இந்தச் சிறுமைத்தனத்தைப் பறைசாற்ற ஆரம்பிக்க, பல தேசங்களில் குறிப்பாக, மூன்றாம் உலக நாடுகளில் அமெரிக்காவைப் பற்றிப் பேசினாலே மக்கள் காறித்துப்ப ஆரம்பித்தார்கள்.

எப்படி ஹங்கேரி விஷயத்தில் அமெரிக்கா அவமானப்பட்டதோ, அதே போல சூயஸ் கால்வாய் விஷயத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இங்கிலாந்தும் பிரான்ஸும் போரில் குதித்ததற்கு பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. எகிப்து ஒரு கொசு. பொருளாதார ரீதியில் அதுவரை எந்த ஒரு வளர்ச்சியையும் காணாத ஏழை தேசம். அங்கே போய் இப்படியா செத்த எலியை அடித்துக்கொண்டிருப்பது என்று உலகமே இந்த இரு தேசங்களைப் பார்த்து ஏளனம் செய்தது. மேலும் சூயஸ் கால்வாய் பிரச்னையின் வேர் எது என்கிற விவரம் முழுதும் அறியாத பாமர மக்களுக்கு, எகிப்தினுள் புகுந்து இந்த தேசங்கள் தாக்குதல் நிகழ்த்தியது அயோக்கியத்தனம் என்றே தோன்றியது. தவிரவும் இஸ்ரேலுக்கு ஆதரவாக அல்லவா இவர்கள் இறங்கியிருக்கிறார்கள்? இஸ்ரேல் யார்? அது ஒரு அமெரிக்க அடிவருடி அல்லவா? மேலும் அரேபிய முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்தவர்கள். பாலஸ்தீனியர்களை அநியாயமாக அகதிகளாக்கியவர்கள். அவர்களுக்குப் போய் இங்கிலாந்தும் பிரான்ஸும் ஒத்துழைப்புக் கொடுத்தன என்றால், அந்த இரு தேசங்களின் யோக்கியதை என்ன என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

உண்மையிலேயே பிரிட்டன் இதனை எதிர்பார்க்கவில்லை. சூயஸ் கால்வாய் ஒரு பொதுச்சொத்து என்று எத்தனை எடுத்துச் சொன்னாலும் யாரும் கேட்கத் தயாராக இல்லை. வீண் வம்பாகத்தான் எகிப்தின் மீது தாக்குதல் நிகழ்த்தினார்கள் என்று ஒட்டுமொத்த மூன்றாம் உலக தேசங்களும் எதிர்ப்புத் தெரிவித்துவிட்டன.

யுத்தம் தொடங்கிய ஓரிரு தினங்களிலேயே இன்னொரு கூத்தும் அரங்கேறியது. பிரிட்டனும் பிரான்ஸும் இஸ்ரேலை ஆதரிக்கின்றன என்று தெரிந்ததுமே சோவியத் யூனியன், எகிப்துக்குத் தன்னுடைய முழு ஆதரவைத் தெரிவித்ததுடன் அல்லாமல், தேவைப்பட்டால், தானும் யுத்தத்தில் எகிப்தின் சார்பில் பங்கேற்க வருவேன் என்று பயமுறுத்தியது.

சோவியத் யூனியன் யுத்தத்தில் பங்கெடுத்தால் பிரிட்டன் அவசியம் அமெரிக்காவைத் துணைக்குக் கூப்பிடும். அமெரிக்காவும் களத்தில் இறங்கினால், அது சூயஸ் கால்வாய், எகிப்து, இஸ்ரேல் என்கிற எல்லைகளைக் கடந்து ஒற்றைப் பரிமாணம் பெற்று அமெரிக்க சோவியத் யுத்தமாகிவிடும். அவர்களின் தனிப் பகைக்கு எகிப்து பலிகடாவாகும். என்னென்னவெல்லாமோ நடந்துவிடும். இது பெரும் அபாயம். பிரிட்டனே கூடக் கூப்பிடவேண்டாம். சோவியத் களமிறங்கியது தெரிந்தாலே அமெரிக்காவுக்குப் போதும். தானாகவே கூட அந்தத் தேசம் யுத்தகளத்துக்கு வந்து இறங்கிவிடும்.

இவ்வாறு அத்தனை தேசங்களுமே எண்ணிக் கவலைப்பட்டுக்கொண்டிருக்க, எதிர்பாராததொரு திருப்பமாக, அமெரிக்காவே முன்வந்து போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது. ஒரு பக்கம் பிரிட்டனிடமும் பிரான்ஸிடமும் கலந்து பேசி யுத்தத்தைக் கைவிடச் சொல்லிவிட்டு, மறுபக்கம் எகிப்து அதிபர் நாசருடன் அமெரிக்க அதிபர் ஐசனோவரே பேசினார்.

முதலில் பிரிட்டன் இதற்கு மறுத்தது. சூயஸ் கால்வாயை நாசர் திறந்து விட்டாலொழிய யுத்தத்தை நிறுத்துவது சாத்தியமில்லை என்று சொன்னது. அமெரிக்கா விடவில்லை. 'காரணங்களைக் கேட்காதீர்கள். போரை நிறுத்தாவிட்டால் பிரிட்டனின் நாணயமான 'பவுண்ட்'டின் மதிப்பை அமெரிக்கா வீழ்த்திவிடும்' என்று பகிரங்கமாக மிரட்டத் தொடங்கியது.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 14 ஜூலை, 2005

No comments: