Sunday, July 24, 2005

70] ஆறு நாள் யுத்தத்தின் பின்னணியில்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 70

1964-ல் தொடங்கப்பட்ட பி.எல்.ஓ.வுக்கு 69-ல்தான் யாசர் அராஃபத் தலைவராக வருகிறார். இடைப்பட்ட காலத்தில் ஒரு மிக முக்கியமான பிரச்னையை அரபு உலகம் சந்திக்க வேண்டியிருந்தது. அதனை முதலில் பார்த்துவிட்டு யாசர் அராஃபத்திடம் போவதுதான் சரியாக இருக்கும்.

ஆறு நாள் யுத்தம் (Six day war) என்று சரித்திரம் வருணிக்கும் இந்தப் போர், 1967-ம் ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேலுக்கும் எகிப்து, சிரியா, ஜோர்டன் ஆகிய தேசங்களுக்குமிடையே நடைபெற்றது. யாருமே எதிர்பார்க்காத, சற்றும் முன்னறிவிப்பில்லாத, திடீரென்று தொடங்கப்பட்ட இந்த யுத்தத்தின் சூத்திரதாரி இஸ்ரேல்.

எந்தவிதமான முன்னேற்பாடுகளும் கிடையாது. திடீரென்று அடிக்க ஆரம்பித்தார்கள். மும்முனைத் தாக்குதல். இங்கே சினாய், அங்கே கோலன் குன்றுகள், மேற்கே வெஸ்ட்பேங்க், கிழக்கே காஸா என்று முந்தைய காலத்தில் இழந்த பகுதிகள் அத்தனையையும் அந்த ஆறு நாள் யுத்தத்தில் அள்ளிக்கொண்டுவிட்டது இஸ்ரேல். என்ன நடக்கிறது என்று சுதாரித்துக்கொள்ளும் முன்னதாகவே யுத்தம் முடிந்துவிட்டது. இஸ்ரேல் என்பது எத்தனை அபாயகரமான தேசம் என்பது வெளிச்சமானது.

இஸ்ரேல் இந்த யுத்தத்தைத் தொடங்கியதற்கான காரணங்கள் மிகவும் நுணுக்கமானவை. 1956-ம் ஆண்டு நடைபெற்ற சூயஸ் யுத்தத்தின்போது இஸ்ரேல் தன் வசப்படுத்திய சினாய் பகுதியை அத்தேசம் மீண்டும் எகிப்துக்கே விட்டுத்தர வேண்டி வந்ததை முன்பே பார்த்தோம் அல்லவா? அதன் விரிவாக்கப்பட்ட தொடர்ச்சி என்று இதனைக் கொள்ளலாம்.

அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனின் அரசியல் நிர்ப்பந்தங்கள் காரணமாகத்தான் சினாயை மீண்டும் எகிப்து வசம் அளித்தது இஸ்ரேல். என்னதான் ராணுவ ரீதியில் அந்த யுத்தத்தில் எகிப்து தோல்வியடைந்திருந்தபோதிலும், இஸ்ரேல் அந்தப் பகுதியைத் திருப்பிக் கொடுத்ததை உலகம் முற்றிலும் வேறு விதமாகவே பார்த்தது. அதாவது, நாசரின் ராஜதந்திர வெற்றி அது என்பதாக ஒரு பிரசாரம் மிகத் தீவிரமாக நடந்தது! இது இஸ்ரேலுக்குப் பெரிய தன்மானப் பிரச்னையாக இருந்தது. அமெரிக்க நிர்ப்பந்தம் இல்லாவிட்டால் நிச்சயமாக சினாயை விட்டுக்கொடுத்திருக்க மாட்டோம் என்று எங்காவது குன்றின் மீது ஏறி நின்று உரக்கக் கத்தலாம் போலிருந்தது அவர்களுக்கு.

ஆனால், அமெரிக்காவை அவர்களால் பகைத்துக்கொள்ள முடியாது. அதற்கு அரசியலைத் தாண்டிய பொருளாதாரக் காரணங்களும் நிறைய இருந்தன. ஆகவே, வாகான ஒரு சந்தர்ப்பத்துக்காக இஸ்ரேல் காத்திருந்தது.

மறுபுறம், சூயஸ் யுத்தத்தைத் தொடர்ந்து எகிப்து, சிரியா, ஜோர்டன் ஆகிய மூன்று நாடுகளுக்கும் ஒருமாதிரியான நேசம் வளர ஆரம்பித்திருந்தது. ராணுவம் முதல் வர்த்தகம் வரை பல்வேறு விதங்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் உதவிகள் செய்துகொண்டும் ஒத்துழைத்துக்கொண்டும் நிஜமான சகோதரத்துவம் பேண ஆரம்பித்திருந்தார்கள்.

இஸ்ரேலுக்கு இது பெரிய ஆபத்தாகப் பட்டது. ஏனெனில், எகிப்து, சிரியா, ஜோர்டன் மூன்றுமே இஸ்ரேலின் மூன்று எல்லைப்புற தேசங்கள். மூன்றும் அரபு தேசங்களும் கூட. இந்த மூவர் கூட்டணியை வளரவிட்டால் எந்தச் சமயத்திலும் தனக்குப் பிரச்னை வரக்கூடும் என்று இஸ்ரேல் பயந்தது. தோதாக, இந்த மூன்று தேசங்களுமே சூயஸ் யுத்தத்தைத் தொடர்ந்து சோவியத் யூனியனுடன் நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்ளத் தொடங்கியிருந்தன. ஜோர்டனுக்கு வேறு பல மேற்கத்திய நாடுகளுடனும் தனியே அப்போது நல்லுறவும் ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தங்களும் இருந்தன.

ஏற்கெனவே எந்த அரபு தேசமும் இஸ்ரேலுக்கு எந்த வகையிலான ஒத்துழைப்பையும் தருவதில்லை என்று முடிவு செய்திருந்த நிலையில், இந்த மூன்று தேசங்களின் நேசக் கூட்டணி இஸ்ரேலுக்கு அச்சம் தந்தது இயல்பான விஷயமே.

தவிரவும் சோவியத் யூனியன் குறித்த நியாயமான பல அச்சங்களும் இஸ்ரேலுக்கு இருந்தன. சூயஸ் யுத்தத்தை உடனடியாக நிறுத்தாவிட்டால் பிரிட்டனின் நாணய மதிப்பைக் குறைத்துவிடுவதாக அமெரிக்கா மிரட்டியதுபோலவே, சோவியத் யூனியனும் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தின் மீது அணு ஆயுத யுத்தம் தொடங்குவேன் என்று மிரட்டியது. (லண்டன் மற்றும் பாரீஸ் நகரங்களில் ஏற்கெனவே சோவியத் யூனியன் அணுகுண்டுகளைக் கொண்டு வந்து இறக்கிவிட்டது என்று கூட ஒரு வதந்தி எழுந்தது!)

இதுபோன்ற மிரட்டல்களால்தான் பிரிட்டனும் பிரான்ஸும் சூயஸ் யுத்தத்தைக் கைவிட்டன. இதே காரணத்தால்தான் இஸ்ரேலும் தன் நோக்கம் முழுவதும் நிறைவேறுவதற்கு முன்னதாகவே யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டிவந்தது. அந்தக் கோபம் அடிமனத்தில் இருந்ததால்தான் பதினொரு வருடங்கள் காத்திருந்து 67-ல் அடிக்க ஆரம்பித்தது.

இவற்றையெல்லாம் தாண்டி இன்னொரு முக்கியக் காரணமும் இந்த யுத்தத்துக்கு உண்டு.

சிரியாவிலிருந்து இஸ்ரேல் வழியாகப் போய் கலீலீ கடலில் கலந்துகொண்டிருந்த டான் மற்றும் பனியாஸ் நதி நீரை திசை திருப்பி, மேற்கே ஓடவிட்டு, ஜோர்டன் நதியில் கலக்கும்படியாக மாற்றியமைக்க, சிரியா ஒரு திட்டம் போட்டது. இது அப்பட்டமாக, வயிற்றிலடிக்கும் காரியம்தான். சந்தேகமே இல்லை. இஸ்ரேலுக்குத் தண்ணீர்த் தட்டுப்பாடு வரவேண்டும் என்கிற 'பரந்த' நோக்கத்துடன் தீட்டப்பட்ட திட்டம்தான். கோடிக்கணக்கில் செலவழித்தாவது இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் சிரியா மிகுந்த ஆர்வம் செலுத்தியதைக் கண்ட இஸ்ரேல், தன் கோபத்தைக் காட்ட ஒரு வழி தேடிக்கொண்டிருந்தது அப்போது.

அந்தக் கோபத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக 1966-ம் ஆண்டு எகிப்தும் சிரியாவும் ஒரு ராணுவ ஒப்பந்தத்தைச் செய்துகொண்டன. இரு தேசங்களில் எந்த தேசத்தை யார் தாக்கினாலும் அடுத்தவர் உடனே உதவிக்கு ஓடி வரவேண்டும் என்பதே அந்த ஒப்பந்தம்.

இதற்குமேல் இஸ்ரேலால் பொறுமை காக்க முடியவில்லை. 1967 ஏப்ரல் 7-ம் தேதி சிரியாவின் ஆளுகைக்குட்பட்ட கோலன் குன்றுப் பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் 'வழக்கமான' எல்லை தாண்டும் திருவிழாவை ஆரம்பித்து வைத்தார்கள். இரு பக்கங்களிலும் மெல்லிய துப்பாக்கிச் சூடுகளுடன் வழக்கமாக முடிந்துவிடும் வைபவம்தான் அது. அப்படித்தான் சிரியா நினைத்தது.

ஆனால் இஸ்ரேல் அந்தச் சிறு சம்பவத்தை அப்படியே ஊதிப் பெரிதாக்கி, பெரிய அளவில் ஒரு யுத்தமாக ஆக்கிவிட்டது. சிரியாவின் ஏழு போர் விமானங்களை (அனைத்தும் MIG 21 ரக விமானங்கள்) ஒரேயடியாக அடித்து வீழ்த்தி, ஒட்டுமொத்த கோலன் பகுதியையும் சுற்றி வளைத்துக்கொண்டு விட்டது.

இது ஒட்டுமொத்த அரபு உலகத்தையும் கோபம் கொள்ளச் செய்தது. அனைத்து தேச அரபுத் தலைவர்களும் அவசரமாகக் கூடிப் பேசினார்கள். இஸ்ரேலின் அராஜகங்களுக்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என்பதே பேச்சின் சாரம். ஆனால் என்ன செய்யலாம்? எப்படிச் செய்யலாம்?

நாசர் தயாராக இருந்தார். ஏற்கெனவே சினாய் விவகாரத்தால் கடுப்பில் இருந்த அவர், இதை ஒரு காரணமாக வைத்து இஸ்ரேல் மீது யுத்தம் தொடுத்தால் எகிப்து முன்னின்று அதனை நடத்தத் தயார் என்று பகிரங்கமாகவே சொன்னார். போதாக்குறைக்கு, அப்படி எகிப்து யுத்தத்தை வழி நடத்துவதென்றால், தன்னாலான அத்தனை உதவிகளையும் செய்யத் தயார் என்று சோவியத் யூனியனும் ரகசியச் செய்தி அனுப்பியது. (சோவியத் யூனியனின் அப்போதைய அதிபர் அலெக்ஸி கோசிஜின்.)

ஆனால் பாதிக்கப்பட்ட தேசமான சிரியாதான் அடியெடுத்துக் கொடுத்தாக வேண்டும்.

பிரச்னை என்னவெனில் சிரியாவுக்கு அப்போது ஒரு யுத்தத்தில் பங்குபெறும் தெம்பு இல்லை. குறைந்தபட்சம் ஒரு படையை இஸ்ரேலின் வடக்கு எல்லையில் ஊடுருவ அனுப்பக்கூட முடியாது என்கிற சூழ்நிலை.

ஆகவே எகிப்து வேறு ஒரு வழியைப் பிடித்தது. இஸ்ரேலின் பிரதான கப்பல் போக்குவரத்து வழியாக இருந்த திரன் ஜலசந்தியை மூடிவிட்டது. இஸ்ரேலின் எண்ணெய் வர்த்தக வழி என்பது அது ஒன்றுதான். ஒரு சொல்லில் விவரிப்பதென்றால் இதற்குப் பெயர்தான் அடிமடியில் கைவைப்பது.

இதெல்லாம் சேர்ந்துதான் இஸ்ரேலை உசுப்பிவிட்டன. முழு மூச்சில் அத்தேசம் யுத்தம் தொடங்க முடிவு செய்துவிட்டது. நாசரும் சொன்னார்: 'எங்களின் அடிப்படை நோக்கமும் இஸ்ரேலை ஒழிப்பதுதான். அத்தனை அரேபியர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள்''

மூன்று முனைகளிலும் இஸ்ரேல் தனது வீரர்களை நிறுத்தியது. மேற்கே ஜோர்டன் ராணுவத்துக்கு எதிராக மேற்குக்கரைப் பகுதியில் யுத்தம். தென் கிழக்கே எகிப்துக்கு எதிராக காஸா மற்றும் சினாய் பகுதிகளில். வடக்கே, சிரியா. கோலன் குன்றுகள்.

நாசர் சில விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொண்டார். யுத்தத்தைத் தான் தொடங்கக்கூடாது என்பது அவற்றுள் முதன்மையானது. இஸ்ரேல்தான் ஆரம்பித்தது. இரண்டாவது, இஸ்ரேலின் தாக்குதல் எத்தனை வலுவாக இருக்கும் என்பது அவருக்குத் தெரியும். அந்தக் காட்சிகளை அலுங்காமல் குலுங்காமல் அப்படியே தூக்கி சர்வதேச மீடியாவில் வெளியிட, அவர் பெரும் முயற்சிகள் மேற்கொண்டார். உலகம் முழுவதும் இஸ்ரேலைத் திட்டித்தீர்க்க இந்த யுத்தத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்பது அவரது திட்டம்.

யுத்தத்தை தான் முதலில் ஆரம்பிக்கக்கூடாது என்று நாசர் முடிவெடுத்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு.

யுத்தம் தொடங்கியதற்கு இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு முன்னதாக அமெரிக்க வெள்ளை மாளிகையிலிருந்து மாஸ்கோவில் இருந்த க்ரெம்ளின் மாளிகைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

பனிப்போர் நடந்துகொண்டிருந்த சமயத்தில் அமெரிக்க அதிபர், சோவியத் அதிபரை அழைத்துப் பேசுவதாவது? நம்ப முடியாத விஷயமாக இருப்பினும் இது நடக்கத்தான் செய்தது.

அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்தவர் லிண்டன் ஜான்சன். அவர்தான் கோசிஜினை அழைத்தார். 'நான் கேள்விப்பட்டது உண்மையா?'' என்று முதல் வரியில் விஷயத்தை ஆரம்பித்தார்.

'என்ன கேள்விப்பட்டீர்கள்?'

'மத்தியக் கிழக்கில் உங்கள் அடிப்பொடியாக இருக்கும் எகிப்து. இன்னும் 48 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது ஒரு பெரிய யுத்தத்தைத் தொடங்கவிருப்பதாக எங்களுடைய இஸ்ரேலிய உளவுத்துறை நண்பர்கள் சொல்கிறார்கள். இது உண்மையா?''

உண்மையில் கோசிஜின் அப்படியொரு விஷயத்தை அப்போது கேள்விப்பட்டிருக்கவில்லை. ஆகவே சற்று அவகாசம் கேட்டார்.

'இதோ பாருங்கள். உலக அளவில் இன்னொரு பெரிய யுத்தத்துக்கு இது வழிவகுக்கக்கூடும். பின் விளைவுகளுக்கு அமெரிக்கா பொறுப்பில்லை' என்று எச்சரித்துவிட்டு போனை வைத்தார் ஜான்சன்.

அது மே 27-ம் தேதி 1967-ம் வருடம். நள்ளிரவு 12.48 மணி. சரியாக ஒன்றே கால் மணி நேரம் கழித்து எகிப்துக்கான சோவியத் தூதராக இருந்த டிமிட்ரி போஜிதேவ் (Dimitri Pojidaev), நாசரின் வீட்டுக்குப் போய்க் கதவைத் தட்டினார்.

'யுத்தத்தை எகிப்து ஆரம்பிப்பதை சோவியத் யூனியன் விரும்பவில்லை. அப்படி நீங்கள் தொடங்கினால், சோவியத்தின் உதவி கிடைக்காமல் போகலாம்' என்று கோசிஜின் சொல்லச் சொன்ன தகவலைத் தெரிவித்தார்.

நாசர் வெறுமனே தலையாட்டிவிட்டு அவரை அனுப்பிவைத்துவிட்டு, உடனே தன்னுடைய வெளி விவகாரத்துறை அமைச்சர் அப்துல் ஹக்கிம் அமீரை (Abdel Hakim Amer) அழைத்து, சோவியத் யூனியனில் உள்ள எகிப்து ஏஜெண்டுகளை அழைத்து கோசிஜின் அப்படித்தான் சொன்னாரா என்று உறுதிப்படுத்தச் சொல்லிக் கேட்டார்.

அவர் சொன்னது உண்மைதான் என்று அடுத்த ஒரு மணி நேரத்தில் உறுதியானது. ஆகவே நாசர், யுத்தத்தை இஸ்ரேலே ஆரம்பிக்கட்டும் என்று காத்திருக்கத் தீர்மானித்தார்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 24 ஜூலை, 2005

No comments: