Friday, September 02, 2005

81] பாலஸ்தீனியன் அத்தாரிடி யாசர் அராஃபத்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 81

ஓஸ்லோ ஒப்பந்தப்படி காஸாவையும் ஜெரிக்கோவையும் முதலில் ஓர் ஐந்தாண்டு காலத்துக்கு நிர்வகிக்கும் பொறுப்பு, அரேபியர்களுக்குக் கிடைக்கும். தன்னாட்சி அதிகாரம் என்கிற பெயரில் அது வருணிக்கப்பட்டாலும், இஸ்ரேலின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு நிலப்பரப்பின் குறுநில ஆட்சியாளர்களாக அரேபியர்கள் இருக்கலாம், இயங்கலாம். பதிலுக்கு யாசர் அராஃபத் என்ன செய்யவேண்டும்?

இதில்தான் யூதர்களின் குயுக்தி வெளிப்பட்டது. பி.எல்.ஓ.வை அரேபியர்களின் ஒரே அரசியல் முகமாகத் தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும், அதன்படி யாசர் அராஃபத்தை பாலஸ்தீனிய அரேபியர்களின் ஒரே தலைவராகத் தாங்கள் அங்கீகரிப்பதாகவும், ஓஸ்லோ ஒப்பந்தத்தையொட்டி அமெரிக்காவில் வைத்து அராஃபத்திடம் சொன்னார், இஸ்ரேலியப் பிரதமர் இட்ஸாக் ராபின். இதன் மறைமுக அர்த்தம் என்னவென்றால் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட அத்தனை மதவாத இயக்கங்களையும் இஸ்ரேலிய அரசு முற்றிலுமாக ஒழித்துக்கட்ட விரும்புகிறது என்பதும், அதற்கு பி.எல்.ஓ. உதவி செய்யவேண்டும் என்பதுமாகும்.

ஏற்கெனவே ஹமாஸை வைத்து பி.எல்.ஓ.வை ஒழிக்க முயற்சி செய்து, அந்த முயற்சியில் தோற்றவர்கள் இஸ்ரேலியர்கள். இப்போது பி.எல்.ஓ.வை ஓர் அரசியல் இயக்கமாக அங்கீகரித்து அவர்களைக் கொண்டு ஹமாஸ் உள்ளிட்ட மதவாத இயக்கங்களை ஒழிக்க விரும்பினார், இஸ்ரேலியப் பிரதமர். அதற்காகத்தான் யூதர்களே யாரும் எதிர்பாராத வகையில் காஸா மற்றும் ஜெரிக்கோ ஆட்சி அதிகாரத்தை யாசர் அராஃபத்துக்கு விட்டுக்கொடுக்க முன்வந்தார்.

இதற்கு எப்படி அராஃபத் ஒப்புக்கொள்ளலாம் என்பதுதான் பாலஸ்தீனிய அரேபியர்களின் கேள்வி. இதனை முன்வைத்துத்தான் அராஃபத் இஸ்ரேலிய அமெரிக்க சூழ்ச்சியில் விழுந்து, விலை போய்விட்டார் என்று பேச ஆரம்பித்தார்கள்.

உண்மையில் ஓஸ்லோ ஒப்பந்தத்துக்கு அராஃபத் ஒப்புக்கொண்டதற்கு வேறு சில நுணுக்கமான காரணங்கள் உண்டு.

தன்னாட்சி அதிகாரம் ஓரிடத்துக்கு வழங்கப்படுகிறதென்றால், அந்த இடத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கென்று தனியே நிதி ஒதுக்கியாகவேண்டும். இஸ்ரேல் அரசுதான் அதைச் செய்துதரவேண்டும். அதுதவிர, ஆட்சி அதிகாரம் கைக்கு வந்தவுடன் தமக்கு உதவக்கூடிய அயல்தேசங்களிடம் கேட்டும் நிதியுதவி பெற்று அடிப்படை வசதிகளைக் கணிசமாக மேம்படுத்தலாம். காஸா, ஜெரிக்கோ பகுதிகளில் பாலஸ்தீனியன் அத்தாரிடி ஆட்சியமைக்கும் பட்சத்தில், மிகக்குறுகிய காலத்தில் அந்தப் பகுதிகளை சிறப்பாக மேம்படுத்தி அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சித் திட்டங்களுக்கு வழிசெய்யும் பட்சத்தில் சர்வதேச அரங்கில் உடனடியாக கவனம் பெற முடியும். அதை வைத்தே பாலஸ்தீன் விடுதலையை துரிதப்படுத்தலாம்.

இதுதான் அராஃபத்தின் திட்டம். இதையெல்லாம் இஸ்ரேலும் யோசிக்காமல் இல்லை. ஆனாலும் அவர்களுக்கு அராஃபத்தின் வாயிலிருந்து ஒரு சொல் வரவேண்டியிருந்தது. 'இஸ்ரேலை அங்கீகரிக்கிறோம்' என்று பி.எல்.ஓ.வின் சார்பில் அவர் ஒருவார்த்தை சொல்லிவிட்டால் அது மிகப்பெரிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாகிவிடும். எந்த அரபு தேசமும் அதுகாறும் இஸ்ரேலை அங்கீகரிக்காமல் இருந்த நிலையில், பாலஸ்தீன் விடுதலை இயக்கத் தலைவரே அதை முன்மொழிய வேண்டுமென்பதுதான் இஸ்ரேலின் விருப்பம்.

அதற்கெல்லாம் அவர் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் மேற்சொன்ன காஸா மற்றும் ஜெரிக்கோ பகுதிகளுக்குத் தன்னாட்சி அதிகாரம் என்று ஒரு சிறு ரொட்டித்துண்டை வீசியது இஸ்ரேல்.

அராஃபத் இந்த வலையில் விழுந்தார்.

காஸா பகுதி நிர்வாகத்தை பாலஸ்தீனியன் அத்தாரிடியிடம் ஒப்படைப்பதை ஒட்டி 2.7 பில்லியன் டாலர் பணத்தை இஸ்ரேல் தரவிருக்கிறது என்று எழுதியது ஒரு பிரபல அரபு தினசரிப் பத்திரிகை. அதிகாரபூர்வமாக இந்த எண்ணிக்கை குறித்து, இரு தரப்பு முக்கியஸ்தர்களும் தகவல் ஏதும் வெளியிடவில்லை என்றபோதும், தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்ட இந்தத் தொகை பற்றிய மறுப்பு ஏதும் வெளிவரவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இதுதவிர மேற்குக் கரை நகரமான ஜெரிக்கோவுக்காகத் தனியே 800 மில்லியன் டாலர் தொகையையும் ஒதுக்க ஒப்புக்கொண்டிருப்பதாகச் செய்தி வெளியானது.

2.7 பில்லியன், 800 மில்லியன் என்பதெல்லாம் மிகப்பெரிய தொகை. அரேபியர்களுக்காக இந்தத் தொகையை இஸ்ரேல் ஒதுக்குகிறது என்பது நம்பவே முடியாத உண்மை. இத்தனை பெரிய தொகை ஒதுக்கப்படுகிறதென்றால், அவர்கள் தரப்புக்கு ஏதோ பெரிதாக லாபம் இல்லாமலா செய்வார்கள்?

இந்தச் சந்தேகம்தான் பாலஸ்தீனிய அரேபியர்களுக்கும் போராளி இயக்கங்களுக்கும் மேலோங்கி இருந்தன. அராஃபத் எப்படி இஸ்ரேலின் நிபந்தனைகளுக்குப் பணியலாம்? கேவலம் இரண்டு நகரங்களின் ஆட்சி அதிகாரத்தைப் பெறுவதற்காகவா இத்தனை ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருக்கிறோம்? என்றால், அரேபியர்களின் அகண்ட பாலஸ்தீன் கனவு அவ்வளவுதானா?

கோபம். கடும் கோபம். குமுறிக் குமுறித் தணிந்துகொண்டிருந்தார்கள். அராஃபத்தை அவர்களால் முற்றிலும் நிராகரிக்கவும் முடியவில்லை. அவரது இந்த ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை. அராஃபத், இஸ்ரேலிய அரசிடம் பணம் வாங்கிக்கொண்டு அரேபியர்களை ஏமாற்றிவிட்டார் என்று கூடச் சில தரப்பினர் மிகக் காட்டமாக விமர்சிக்க ஆரம்பித்தார்கள்.

ஆனால் இது அடிப்படையில்லாத சந்தேகம். அராஃபத்தின் நோக்கம், இந்தத் தாற்காலிக ஏற்பாட்டினாலாவது பாலஸ்தீன் மக்களின் துயர் துடைக்கக் கொஞ்சம் நிதி கிடைக்குமே என்பதுதான். இஸ்ரேல் ஒதுக்கும் நிதி மட்டுமல்ல. எல்லாம் நல்லபடியாக நடந்து, காஸா, ஜெரிக்கோ பகுதியின் நிர்வாகம் பாலஸ்தீன் அத்தாரிடி வசம் வந்துவிடுகிற பட்சத்தில், ஒப்பந்தத்தில் கூறியிருந்தபடி இஸ்ரேல் என்கிற தேசத்தை யாசர் அராஃபத் அங்கீகரிக்கும் பட்சத்தில், பல்வேறு அரபு தேசங்களும் அமெரிக்காவும் ஸ்காண்டிநேவியா அரசுகள் சிலவும் பாலஸ்தீனுக்கு நிறையக் கடனுதவி செய்வதற்கான சாத்தியங்கள் மிகத் தெளிவாகத் தெரிந்தன.

கல்வி, வேலை வாய்ப்பு, அடிப்படை வாழ்க்கைத் தரம் என்று அனைத்து அம்சங்களிலும் மிகவும் பின்தங்கியிருந்த பாலஸ்தீன அரேபியர்களின் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சி உண்டாக்க, இது ஒரு சரியான சந்தர்ப்பமாக இருக்கும் என்று அராஃபத் நினைத்தார். அதனால்தான் இறங்கிவந்து இஸ்ரேலுடன் கைகுலுக்கவும் இஸ்ரேலை அங்கீகரிக்கவும் கூடத் தயாரென்று அறிவித்தார்.

ஒரு போராளி இப்படிச் செய்வதைச் சகிக்கமுடியாமல் இருக்கலாம். ஆனால் மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஓர் அரசியல்வாதி செய்வதாக யோசித்துப் பார்த்தால் அராஃபத் செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்கிற முடிவுக்கு வரவேண்டியிருக்கும். அவர் தன்னை முதன்மையாக ஒரு போராளியாக முன்னிறுத்திவந்ததுதான் இங்கே பிரச்னையாகிவிட்டது. போயும் போயும் இஸ்ரேலுடன் எப்படி அராஃபத் கைகுலுக்கலாம் என்கிற கோபம்தான், அவரை ஓர் ஊழல்வாதியாகப் பேசவும், எழுதவும் வைக்கும் அளவுக்கு அரேபியர்களைக் கோபத்தின் உச்சிக்குக் கொண்டுபோனது.

உண்மையில் அராஃபத் ஊழல் செய்தார் என்பதற்கு இன்றுவரை யாராலும் வலுவான ஆதாரங்களைக் காட்டமுடியவில்லை. சில சந்தேகங்கள் இருந்தன. யூகங்கள் இருந்தன. முணுமுணுப்புகள் இருந்தன. ஏராளமான கருத்து வேறுபாடுகளும் மனக்கசப்புகளும் கூட இருந்தன. பாலஸ்தீனியன் அத்தாரிடி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி, அராஃபத் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இரு நகரங்களின் ஆட்சிப் பணிகளை மேற்கொண்டபோது, அனைத்துப் பணத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்துக்கொண்டார், கணக்கு வழக்கு விவகாரங்களில் வெளிப்படையான அணுகுமுறை இல்லை என்றெல்லாம் குறை சொன்னார்கள். அவர் ஒரு சர்வாதிகாரிபோல் நடந்துகொள்கிறார் என்றும் சொன்னார்கள். ஆனால் யாராலும் எதையும் ஆணித்தரமாக நிரூபிக்க முடியவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

ஆனால் இவற்றால் மட்டுமே அராஃபத் செய்தது முழு நியாயம் என்றும் ஆகிவிடாது. பல லட்சக்கணக்கான பாலஸ்தீனிய அரேபியர்கள் 1948 யுத்தத்தைத் தொடர்ந்து, அகதிகளாக சிரியாவுக்கும் ஜோர்டனுக்கும் எகிப்துக்கும் இன்னபிற தேசங்களுக்கும் போய் வசிக்க வேண்டிவந்தது நினைவிருக்கும். அவர்களுக்கெல்லாம் இருந்த ஒரே நம்பிக்கை, என்றைக்காவது இழந்த தாயகம் மீண்டும் கிடைக்கும்; அப்போது இழந்த வாழ்க்கையைத் திரும்பப் பெறலாம் என்பதுதான்.

ஓஸ்லோ ஒப்பந்தத்தின்படி அராஃபத் நடந்துகொள்ளத் தொடங்கியதன் விளைவு என்னவெனில், அவர்களின் கனவு தகர்ந்துபோனது. இஸ்ரேல்தான் அதிகாரமுள்ள தேசம். பாலஸ்தீன் அத்தாரிடி என்பது, இஸ்ரேலின் மேலாண்மைக்குக் கட்டுப்பட்ட ஓர் உள்ளாட்சி அமைப்பு. தனியாட்சி அதிகாரம் என்று சொல்லப்பட்டாலும், எந்தக் கணத்திலும் இஸ்ரேல் அதை ரத்து செய்யும் தகுதியைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. மேலும் பாலஸ்தீனியர்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமான பி.எல்.ஓ., இஸ்ரேலின் இந்தத் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டு செயல்பட ஆரம்பித்துவிட்டதும், பாலஸ்தீனியர்களின் சுதந்திர தாகத்தைத் தணிக்கக்கூடிய இயக்கம் என்று வேறு எதுவுமே இல்லாமல் ஆகிவிட்டது. ஹமாஸைத் தீவிரவாத இயக்கம் என்று முத்திரை குத்திவிட்டார்கள். அவர்கள் குண்டுவைக்கலாமே தவிர, இஸ்ரேலுக்கு எதிராக ஒரு முழு யுத்தம் நடத்த முடியுமா என்பது சந்தேகமே. அப்படியே நடத்தினாலும் எந்த தேசமும் உதவிக்கு வராது. ஒரு தீவிரவாத இயக்கத்துக்கு யார் உதவி செய்ய வருவார்கள்?

ஆக, நோக்கம் எத்தனை உயர்வானதாகவே இருந்தாலும், அராஃபத் இஸ்ரேலின் வலையில் விழுந்தது உண்மை என்றாகிவிட்டது. இஸ்ரேலை அவர் அங்கீகரிக்கவும் செய்துவிட்டார். இதற்குமேல் எந்த முகத்தை வைத்துக்கொண்டு இண்டிஃபதாவைத் தொடருவது?

இன்னொரு விஷயத்தையும் சொல்லவேண்டும். இண்டிஃபதா உக்கிரமாக நடைபெற்று வந்த காலத்தில் மொத்தம் சுமார் பதினான்காயிரம் அரேபியர்களை இஸ்ரேலியக் காவல்துறை சிறைப்பிடித்து அடைத்து வைத்திருந்தது. ஓஸ்லோ ஒப்பந்தப்படி அரேபியர்களின் தன்னாட்சி உரிமையை அவர்கள் அங்கீகரிப்பது உண்மையென்றால், நல்லுறவின் அடையாளமாக முதலில் அவர்களை விடுவிப்பது குறித்தல்லவா பேசியிருக்கவேண்டும்?

ஆனால் அந்தப் பதினான்காயிரம் பேரின் கதி என்னவென்று கடைசிவரை சொல்லவே இல்லை. அராஃபத்தும் அது குறித்துக் கேள்வி எழுப்பவில்லை என்பது மிகவும் உறுத்தலாகவே இருந்துவந்தது.

செப்டம்பர் 9, 1993 அன்று அராஃபத் ஒரு பத்திரிகைச் செய்தி வெளியிட்டார். இஸ்ரேலை அங்கீகரித்து வெளியிடப்பட்ட முதல் அறிக்கை அது. ஒட்டுமொத்த பாலஸ்தீனியர்களும் மனத்துக்குள் குமுறிக் குமுறித் தணிந்தார்கள். இதனைத் தொடர்ந்துதான் செப்டம்பர் 13-ம் தேதி வாஷிங்டன் நகரில் பில் க்ளிண்டன் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. காஸாவையும் மேற்குக்கரையின் சில பகுதிகளையும் பாலஸ்தீனியன் அத்தாரிடியிடம் ஒப்படைப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் அறிவித்தார். உடனடியாக பாலஸ்தீனியன் அத்தாரிடியின் தலைவராக யாசர் அராஃபத் பி.எல்.ஓ.வினரால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரமல்லாவில் இருந்தபடி அவர் ஆட்சி புரிவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஒரு சில பாலஸ்தீனியன் அத்தாரிடி முக்கியஸ்தர்கள், இந்த அமைதி உடன்படிக்கை, நீண்டநாள் நோக்கில் பலன் தரத்தக்கது என்று பக்கம் பக்கமாகப் பேசியும் எழுதியும் வந்தபோதும், பெரும்பாலான பி.எல்.ஓ.வின் இரண்டாம் நிலைத் தலைவர்களுக்கே இந்த ஏற்பாடு பிடிக்கவில்லை என்பது மிக வெளிப்படையாகத் தெரிந்தது. ஒப்பந்தம் முடிவானவுடனேயே பி.எல்.ஓ.வின் செயற்குழு உறுப்பினர்களான மஹ்மூத் தார்விஷ் என்பவரும் ஷாஃபிக் அல் ஹெளட் என்பவரும் தமது பொறுப்புகளை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்கள். அவர்களைத் தொடர்ந்து வேறு சில முக்கிய பி.எல்.ஓ. தலைவர்களும் விரைவில் ராஜினாமா செய்யவிருப்பதாகப் பரபரப்பாகப் பேசப்பட்டது.

ராஜினாமா செய்த மஹ்மூத், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் 'அராஃபத் மிகவும் தன்னிச்சையாக நடந்துகொள்கிறார். பாலஸ்தீனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை அவர் கையாளும் விதம் அச்சமூட்டும்விதத்தில் இருக்கிறது. யாராலுமே கணக்குக் கேட்கவும் முடியவில்லை, எதுவும் வெளிப்படையாகவும் இல்லை' என்று சொன்னார்.

ஆட்சி அதிகாரம் கைக்கு வந்த மறுகணமே நிதி விவகாரங்களில் குற்றச்சாட்டு எழுந்ததில் அராஃபத் மிகவும் மனம் உடைந்துபோனார். பெரும்பாலான பாலஸ்தீனியர்களுக்கு இந்த ஏற்பாடே பிடிக்கவில்லை என்பதிலும் அவருக்கு வருத்தம்தான். அமைதியின் தொடக்கமாக ஓஸ்லோ ஒப்பந்தத்தை அவர் கருதினார். அதன் வழியே எப்படியாவது 1967 யுத்தத்துக்கு முன்னர், பாலஸ்தீனிய அரேபியர்களுக்கென்று இருந்த நிலப்பரப்பை முழுவதுமாக மீட்டு, ஒரு சுதந்திர பாலஸ்தீனை நிறுவுவதே அவரது கனவாக இருந்தது.

அதையெல்லாம் யாரும் பொருட்படுத்தத் தயாராக இல்லை. உள்நாட்டில் அராஃபத்தின் செல்வாக்கு கணிசமாகச் சரியத் தொடங்கிய அதே சமயம், அமைதிக்கான நோபல் பரிசை அவர் ஷிமோன் பெரஸ் மற்றும் இட்ஸாக் ராபினுடன் பகிர்ந்துகொள்வார் என்று ஸ்வீடிஷ் அகடமி அறிவித்தது.

இது நடந்தது 1994-ம் ஆண்டு. பாலஸ்தீனியர்கள் இன்னும் கோபம் கொண்டார்கள். நிலைமை மேலும் மோசமாகத்தான் ஆரம்பித்தது.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 1 செப்டம்பர், 2005

No comments: