Tuesday, June 07, 2005

57] இஸ்ரேல் உதயம்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 57
பாலஸ்தீன் அரேபியர்கள், யூதர்கள் மீதான கொலைவெறித் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்த அதே சமயத்தில், பிரிட்டன் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. மே மாதம் 15-ம் தேதி (1948-ம் வருடம்), பாலஸ்தீனிலிருக்கும் தனது துருப்புகளை முழுவதுமாக வாபஸ் பெற்றுக்கொள்ளும் என்பதே அந்த அறிவிப்பு.

அதாவது மே மாதம் 15-ம் தேதியுடன் பாலஸ்தீனுக்கும் பிரிட்டனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இரண்டாம் உலகப்போர் காலம் தொடங்கி பிரிட்டனின் காலனியாக இருந்துவரும் பாலஸ்தீன், அன்று முதல் சுதந்திர நாடு என்பதே இந்த அறிவிப்பின் பொருள்.

இந்த அறிவிப்பு வெளியானதும் அரேபியர்களின் கோபம் உச்சகட்டத்தைத் தொட்டுவிட்டது. கண்மண் தெரியாமல் அவர்கள் யூதர்களைத் தாக்க ஆரம்பித்தார்கள். அக்கம்பக்கத்து தேசங்களில் இருந்தெல்லாம் கடனுக்கு ஆயுதங்களை வாங்கிவந்து குவித்தார்கள். பழக்கமே இல்லாதவர்கள் கூட துப்பாக்கி ஏந்தி கண்ணில் பட்டவர்களைச் சுட்டுத்தள்ளத் தொடங்கினார்கள்.

இதற்கு ஆறு வாரங்கள் முன்னதாகவே, பாலஸ்தீனின் பிற பகுதிகளிலிருந்து யூதர்கள் யாரும் ஜெருசலேத்தை நெருங்க முடியாதபடி மிகக் கடுமையான பாதுகாப்பு வளையங்களை உருவாக்கி வைத்துவிட்டார்கள். ஜெருசலேத்திலிருந்து வெளியே யாரும் கடிதம் அனுப்பமுடியாது. யாரிடமாவது தகவல் சொல்லி அனுப்பலாம் என்றால் அதுவும் முடியாது. எப்படி வெளியிலிருந்து யாரும் உள்ளே போக முடியாதோ, அதேமாதிரி நகருக்கு உள்ளே இருக்கும் யாரும் வெளியே போகவும் முடியாது. மீறி யாராவது நகர எல்லையைத் தாண்டுவார்களேயானால் உடனடியாகச் சுட்டுக்கொல்லப்படுவார்கள்.

என்னதான் பிரிட்டிஷ் காவலர்கள் பாதுகாப்புக்கு இருந்தாலும் அரேபியர்கள் மிகவும் சாமர்த்தியமாக அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, தமக்கான மறைவிடங்களைப் பாலைவனங்களிலும் முள்புதர்க் காடுகளிலும் அடர்ந்த மரங்களின் கிளைகளிலும், இடிந்த கட்டடங்களில் சுரங்கம் தோண்டியும் அமைத்துக்கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே ஒற்றர்களை நிறுத்தி, யாராவது நகருக்குப் புதிதாக வருகிறார்களா, அல்லது நகரிலிருந்து யாராவது, எந்த வாகனமாவது வெளியேறுகிறதா என்று கவனித்து உடனடியாகப் போய்த் தாக்குவார்கள்.

தாக்கும் கணத்தில் மட்டும்தான் கண்ணில் படுவார்கள். அடுத்த வினாடி அவர்கள் எங்கே போனார்கள் என்பதே தெரியாது. அரேபியர்களின் மனத்தில் இருந்த கோபமும் வேகமும் அவர்களை அத்தனை விரைவாகச் செயல்படவைத்தது!

இத்தகைய காரியங்களைச் செய்தவர்கள் பாலஸ்தீனத்து அரேபியர்கள் மட்டும் அல்லர்; சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டு சிந்தை இரங்கிய அக்கம்பக்கத்து நாடுகளைச் சேர்ந்த அரேபியர்களும் அவர்களின் உதவிக்கு அப்போது வந்திருந்தார்கள். குறிப்பாக, சிரியாவிலிருந்து சில ஆயிரம் பேர் வந்திருந்தார்கள். ஈராக்கிலிருந்து எழுநூறு பேர் கொண்ட ஒரு குழுவே தனியாக வந்திருந்தது. எகிப்திலிருந்தும் நூற்றைம்பது பேர் பாலஸ்தீன் அரேபியர்களுக்கு உதவி செய்வதற்காக ஆயுதங்களுடன் வந்திருந்தார்கள்.

இஸ்ரேல் உருவாகும் தினம் நெருங்க நெருங்க, பாலஸ்தீன் முழுவதும் பதற்றம் அதிகரித்தது. மார்ச் இறுதி, ஏப்ரல் மாதங்களில் பாலஸ்தீனிலிருந்த ஒவ்வொரு யூத கிராமமும் முறை வைத்துக்கொண்டு தாக்கப்பட்டன.

அரேபியர்கள் முதலில் காவல் நிலையங்களைத்தான் தாக்குவார்கள். அங்குள்ள தொலைத்தொடர்பு சௌகரியங்களை அழித்துவிட்டு, காவலர்களைக் கட்டிப்போட்டுவிடுவார்கள். அதன்பின் கிராமத்துக்குள் நுழைந்து யூதர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டுக் காணாமல் போய்விடுவார்கள். இதுதான் அவர்கள் மேற்கொண்ட நடைமுறை.

ஏப்ரல் 13-ம் தேதி ஆன்ர் ஈஜன் (Kfaretzion) என்கிற யூத கிராமத்தை ஒரு அரபுப்படை சூழ்ந்துகொண்டது. பெத்லஹெமுக்குத் தெற்கே இருக்கும் கிராமம் இது. சுற்றி வளைத்த அரேபியக் கலகக்காரர்கள் மொத்தம் 400 பேர். ஆனாலும் கிராமத்துவாசிகள் தயாராக இருந்ததால், அவர்களை உடனே அடித்துத் துரத்திவிட்டார்கள். வன்மத்துடன் மீண்டும் மோதிய அரேபியர்கள் ஒரே இரவில் நூற்றுப்பத்து யூதர்களை அங்கே கொலை செய்தார்கள். தவிர, சரணடைந்த சுமார் நூறு யூதர்களையும் வரிசையில் நிற்கவைத்து இயந்திரத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள். இந்தக் காட்சியைப் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்கள்!

பொதுவாக, இம்மாதிரியான தாக்குதல்கள் வேகமடையும்போது, இருப்பிடத்தை விட்டு நகர்ந்து, பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுவதுதான் யூதர்களின் இயல்பு. அதை மனத்தில் கொண்டுதான் அரபுகள், யூத கிராமங்களுக்குள் புகுந்து தாக்கிக்கொண்டிருந்தார்கள். எப்படியாவது பாலஸ்தீனிலிருந்து யூதர்களை ஓட்டிவிடவேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல்தானே ஐரோப்பாவிலிருந்து ஓடிவந்தார்கள்? அதே தாக்குதல்கள் மூலம் பாலஸ்தீனில் இருந்தும் அவர்களை விரட்டிவிடலாம் என்று நினைத்தார்கள் அவர்கள்.

ஆனால் யூதர்கள் விஷயத்தில் இது மிகப்பெரிய தப்புக்கணக்கு என்பது அரேபியர்களுக்கு அப்போது புரியவில்லை. அவர்கள் எங்கிருந்து துரத்தினாலும் பாலஸ்தீனுக்கு ஓடிவருவார்களே தவிர, பாலஸ்தீனிலிருந்து இன்னொரு இடத்துக்கு ஓடுவதற்குத் தயாராக இல்லை! அடித்தால் திருப்பி அடிப்பது. முடியாவிட்டால் தற்காத்துக்கொள்வது. அதுவும் முடியாவிட்டால் அடிபடுவது, உயிர் போகிறதா? அதுவும் பாலஸ்தீனிலேயே போகட்டும்.

அப்படியொரு மனப்பக்குவத்துக்கு வந்துவிட்டிருந்தார்கள். ஆயிரமாண்டு காலமாக ஓடிக் களைத்தவர்கள் அல்லவா? இன்னொரு ஓட்டத்துக்கு அவர்கள் தயாராக இல்லை. தவிர, அரேபியர்களின் தாக்குதல்களெல்லாம் தாற்காலிக எதிர்ப்புதான் என்று யூதர்கள் நினைத்தார்கள்.

காரணம், எப்படியிருந்தாலும் இன்னும் சில தினங்களில் சுதந்திரம் வந்துவிடப்போகிறது; இஸ்ரேல் என்கிற தனிநாடு உருவாகிவிடப் போகிறது. தனி அரசாங்கம், தனி ராணுவம், தனி போலீஸ் என்று சகல சௌகரியங்களுடன் வாழப்போகிறார்கள். அப்போது சேர்த்துவைத்து பதிலடி கொடுத்தால் போயிற்று என்றுதான் அவர்கள் நினைத்தார்கள்.

தங்கள் தாக்குதலுக்கு அவர்கள் பயந்து ஓடவில்லை என்பதுதான் அரேபியர்களுக்கு விழுந்த முதல் அடி. அவர்களால் நம்பவே முடியவில்லை. யூதர்களா எதிர்த்து நிற்கிறார்கள்? யூதர்களா அடிவாங்கிக்கொண்டு விழுகிறார்கள்? யூதர்களா ஓடாமல் இருக்கிறார்கள்? எனில், சரித்திரம் சுட்டிக்காட்டிய உண்மைகள் எல்லாம் பொய்யா? ஓடப்பிறந்தவர்கள் அல்லவா அவர்கள்? ஏன் ஓடாமல் இருக்கிறார்கள்?

அவர்களுக்குப் புரியவில்லை. ஆகவே, இன்னும் கோபம் தலைக்கேறி, இன்னும் உக்கிரமாகத் தாக்க ஆரம்பித்தார்கள். பல கிராமங்களில் இருந்த யூதர்களை விரட்டி விரட்டிக் கொன்றார்கள். அதேசமயம், தைபெரியஸ், ஹைஃபா, ஏக்ர், ஜாஃபா, ஸஃபேத் போன்ற அரேபியர்களின் கோட்டை போன்ற நகரங்களை யூதர்களும் தாக்கிக் கைப்பற்றிக்கொண்டார்கள்.

நாள் நெருங்க நெருங்க அரேபியர்களின் ஜுரம் அதிகமானது. இன்னும் ஆள் பலம் வேண்டும் என்று கருதி, ஜெருசலேத்தைக் காப்பதற்காக நிறுத்திவைத்திருந்த சில ஆயிரம் பேரையும் யூதர்களின் குடியிருப்புகளைத் தாக்கும் பணியில் இறக்கினார்கள். 1947 நவம்பர் தொடங்கி, இஸ்ரேல் பிறந்த தினம் வரை மொத்தம் ஆறாயிரம் யூதர்கள் பாலஸ்தீனில் படுகொலை செய்யப்பட்டார்கள். இது மொத்த யூத மக்கள் தொகையில் (பாலஸ்தீனில் மட்டும்) ஒரு சதவிகிதம்!

மே மாதம் பிறந்தது. ஒட்டுமொத்த பாலஸ்தீனும் பதறிக்கொண்டிருந்தது. ஒரு பக்கம், பாலஸ்தீனை விட்டு நகர்வதற்காக பிரிட்டிஷ் துருப்புகள் தயாராகிக்கொண்டிருந்தன. மறுபக்கம், அவர்கள் எப்போது நகர்கிறார்களோ, உடனடியாக உள்ளே புகுந்து யூதர்களை கபளீகரம் செய்துவிடும் வெறியுடன் அரேபியர்களின் நட்புக்கு வந்த எகிப்து, டிரான்ஸ்ஜோர்டன், சிரியா, லெபனான் ஆகிய தேசங்களின் ராணுவங்கள் எல்லையில் அணிவகுத்து நின்றன. அவர்களுக்கு உதவியாக, உள்ளூர் பாலஸ்தீனிய தனியார் ராணுவங்கள் ஆயத்தமாகிக்கொண்டிருந்தன.

பத்து நாள். ஒன்பது நாள். எட்டு நாள். ஏழுநாள். ஆறுநாள்.

திடீரென்று பிரிட்டன், தன் துருப்புகளை விலக்கிக்கொள்ளும் தினம் மே 15 அல்ல; மே மாதம் 14-ம் தேதியே வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்துவிட்டது.

முழு இருபத்து நான்கு மணி நேரத்துக்கு முன்னதாகச் சுதந்திரம்! இஸ்ரேல் உதயமாகும் தினம் ஒரு நாள் முன்கூட்டியே வந்துவிடுகிறது! அரேபியர்களின் அவல வாழ்க்கை ஒருநாள் முன்கூட்டியே ஆரம்பமாகிவிடுகிறது.

இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. சுதந்திரத்துக்கு என்று ஒரு நாள் குறித்துவிட்டு, அதை ஒருநாள் முன்னதாக மாற்றி அமைக்கும் வழக்கம் அதற்கு முன் எப்போதும் இருந்ததில்லை. பிரிட்டன் ஏன் அப்படியொரு முடிவை எடுத்தது; ஒருநாள் முன்னதாக அதனைச் செய்வதன் மூலம் என்ன சாதிக்க நினைத்தது என்பது அப்போது யாருக்குமே தெரியாது.

யூதர்களின் அரசியல் தலைவர்களும் ராணுவத் தளபதிகளும் அவசர அவசரமாகக் கூடிப் பேசினார்கள். இனியும் பிரிட்டனை நம்பிக்கொண்டோ, எதிர்பார்த்துக்கொண்டோ இருக்க முடியாது. சுதந்திர தேசம் கிடைத்துவிடும். அதில் சந்தேகமில்லை. ஆனால் இஸ்ரேல் யூதர்களின் பாதுகாப்புக்கு முதலில் வழி செய்தாக வேண்டும். என்ன செய்யலாம்? எம்மாதிரியான வியூகம் வகுக்கலாம்?

இகேல் யாதின் (Yigael Yadin) என்பவர் அப்போது இஸ்ரேலிய ராணுவத்தின் முதன்மைத் தளபதியாக இருந்தார். அவர் பென்குரியனிடம் சொன்னார்: ‘இது சவால். நம்மிடம் போதிய ஆயுதபலம் கிடையாது. எதிரிப் படைகள் முழு பலத்துடன் இருக்கின்றன. நமது வீரர்கள் மனபலத்தை மட்டுமே வைத்துப் போரிட்டாக வேண்டும்.’

உண்மையில், மிகவும் உணர்ச்சிமயமான சூழ்நிலை அது. சுமார் ஆயிரத்து எண்ணூறு வருடங்களுக்கு முன்னர் ரோமானியப் படையை எதிர்த்து யூதத் தளபதி பார் கொச்பா நடத்திய யுத்தம்தான், அதற்கு முன் யூதர்கள் தம் தேசத்தைக் காப்பதற்காக நடத்திய யுத்தம். அத்தனை நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் யூதர்கள் தமது தேசம் என்கிற பெருமிதத்துடன், அதைக் காப்பதற்காக ஒரு யுத்தம் செய்யவிருந்தார்கள்!

மே மாதம் 13-ம் தேதி, 1948-ம் வருடம். பெரும்பாலான பிரிட்டிஷ் துருப்புகள் பாலஸ்தீனை விட்டுப் போய்விட்டிருந்தன. நகரங்கள் பேயடித்தமாதிரி அமைதியில் இருந்தன. பொழுது விடிந்தால் சுதந்திரம். பொழுது விடியும்போது இஸ்ரேலும் பிறக்கும்! அதே பொழுது விடியும்போது அரேபியர்கள் தாக்கவும் ஆரம்பித்துவிடுவார்கள்!

இஸ்ரேல் பிறக்கும் சந்தோஷத்தை அனுபவிப்பதா? எதிர்வரும் யுத்தத்தை நினைத்துக் கவலைப்படுவதா? யுத்தத்தில் என்ன ஆகப்போகிறது. இஸ்ரேலிய ராணுவம் ஜெயிக்குமா? அல்லது நான்கு தேசங்களின் துணையுடன் தாக்கப்போகிற பாலஸ்தீனிய அரேபியர்கள் வெற்றி பெறுவார்களா?

யாருக்கும் தெரியாது. என்னவும் நடக்கலாம். எப்படியும் நடக்கலாம்.

மே 14, 1948. விடிந்துவிட்டது அன்றைய தினம்.

முந்தைய நாள் இரவுடன் அத்தனை பிரிட்டிஷ் ராணுவ வீரர்களும் போய்விட்டிருக்க, அன்று காலை கட்டக்கடைசியாக பாலஸ்தீனுக்கான பிரிட்டிஷ் ஹை கமிஷனர் மட்டும் ஜெருசலேத்தில் இருந்தார். தன் அலுவலகத்தைப் பூட்டிக்கொண்டு, ஒப்படைக்க வேண்டிய தஸ்தாவேஜ்களை உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, கடைசிக் கையெழுத்துகளைப் போட்டுவிட்டு, பெட்டியைத் தூக்கிக்கொண்டு கையாட்டிவிட்டு வண்டியேறினார்.

பிரிட்டனின் முப்பது வருட ஆட்சி அந்த வினாடியுடன் ஒரு முடிவுக்கு வந்தது. இனி பாலஸ்தீன் என்று ஒரு தேசம் இல்லை. இஸ்ரேல் - பாலஸ்தீன் என்று இரு தேசங்கள். இந்தியா - பாகிஸ்தான் மாதிரி அவையும் அண்டை தேசங்களாக இருக்கும்.

உணர்ச்சி உடைந்து பெருக்கெடுக்கத் தருணம் பார்த்துக்கொண்டிருந்த சமயம். ஹை கமிஷனரை வழியனுப்பிவிட்டு, அவசரஅவசரமாக டெல் அவிவ் நகருக்குப் போய்ச் சேர்ந்தார் இஸ்ரேலின் அரசியல் தலைவர் பென்குரியன்.

நேரம் பிற்பகல் ஒன்று ஆகியிருந்தது. அறிவிப்புக்கான சமயம் நெருங்கிக்கொண்டிருந்தது. இறுதிக்கட்ட நடவடிக்கைகள் வேகமாக நடந்தன. குரியன் தன் சகாக்களுடன் கலந்து பேசினார். ‘பாதுகாப்பு ஏற்பாடுகள் தயாரா?’ என்று ராணுவத் தளபதிகளைக் கேட்டுக்கொண்டார்.

எல்லாம் தயார் என்று ஆனதும் சர்வதேச மீடியாவுக்கும் பாலஸ்தீனின் யூதர்களுக்கும் அந்த அறிவிப்பை வெளியிட்டார்: "இன்று முதல் இஸ்ரேல் பிறக்கிறது. யூதர்களின் தேசம்."

அந்தக் கணத்துக்காகக் காத்திருந்த யூதர்கள், பரவசத்தில் ஓவென்று அழுது கண்ணீர் விட்டார்கள். குதித்து, ஆனந்தக் கூத்தாடினார்கள். ஒருவரையருவர் கட்டித்தழுவி அன்பைப் பரிமாறிக்கொண்டார்கள்.

மறுபுறம் பாலஸ்தீனின் அனைத்து எல்லைகளிலிருந்தும் அரபுப் படைகள் உள்ளே நுழைய இறுதிக்கட்ட ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்தன.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 9 ஜூன், 2005

No comments: